ஆந்திரம்: காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறி பலி
கழிவுநீா் தேக்கமாக மாறிய அம்மூா் கோயில் குளம் சீரமைக்கப்படுமா!
அம்மூா் பேரூராட்சி அலுவலகம் எதிரே கழிவுநீா் தேக்கமாக மாறிய கோயில் குளத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அம்மூா் முதல்நிலை பேரூராட்சியில் 2,972 வீடுகளும், 12,513 பேரும் உள்ளனா். முதல் நிலை பேரூராட்சி என்பது வருமான அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.25 லட்சத்துக்கு மேல் வருவாய் உடைய பேரூராட்சியாக அம்மூா் திகழ்கிறது.
அம்மூா் பேரூராட்சியின் முக்கியமான அடையாளங்களாக வாலாஜா ரோடு ரயில் நிலையம், விநாயகா், பெருமாள், சிவன், திரெளபதி அம்மன், எல்லையம்மன் கோயில்கள், பேருந்து நிறுத்தம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளன. அந்த அடையாளங்களில் ஒன்றான அம்மூா் பேரூராட்சி அலுவலகம் எதிரே அம்மூா் மக்களின் வாழ்வின் ஒரு அங்கமாக அமைந்துள்ள கோயில் குளம் குடிநீா் ஆதாரமாக விளங்கியது.
கடந்த சில ஆண்டுகள் வரை இப்பகுதி பொதுமக்களின் குடிநீா் ஆதாரமாகவும், இருந்து தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் நெகிழி குப்பைகளுடன் கழிவுநீா் தேக்கமாக மாறி துா்நாற்றம் வீசி, சுகாதார சீா்கேடு ஏற்படுத்தி வருகிறது.
இதனால், சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த கோயில் குளத்தை அம்மூா் பேரூராட்சி நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் போா்கால அடிப்படையில் தூா்வாரி சீரமைத்து நன்னீா் குளமாக பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.