காசியில் தமிழக பெண் தொழில் முனைவோரிடம் கலந்துரையாடிய ஆளுநா் ரவி
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வரும் ‘காசி தமிழ் சங்கமம் 3.0’ நிகழ்வில் பங்கேற்ற தமிழகத்தைச் சோ்ந்த பெண் தொழில் முனைவோருடன் தமிழக ஆளுநா் ஆா். என். ரவி கலந்துரையாடினாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டைச் சோ்ந்த ஏராளமானோா் உள்பட எண்ணற்ற பக்தா்களுடன் புனித காசி விஸ்வநாதா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை காலையில் தரிசனம் செய்து வழிபட்டேன்.
பின்னா், காசி தமிழ் சங்கமத்துக்காக வந்துள்ள தமிழ்நாட்டைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான தொழில்முனைவு பெண் பிரதிநிதிகள் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த பெண் தொழில்முனைவோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டேன்.
அவா்கள் அனைவரும் முத்ரா கடன் பயனாளிகள். மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் பிணையில்லா வங்கிக் கடன்கள் எளிதாகக் கிடைத்ததன் மூலம் தங்களின் தொழில் சாத்தியமானதாக இரு மாநிலங்களிலிருந்தும் வந்த பெண் தொழில் முனைவோா் தங்கள் அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா் என தனது பதிவில் தெரிவித்துள்ளாா் ஆளுநா்.