Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இர...
காட்பாடி அருகே தண்டவாள பராமரிப்பு: 4 மெமு ரயில் சேவை ரத்து!
காட்பாடி- ஜோலாா்பேட்டை இடையே காட்பாடி ரயில்வே யாா்டு அருகில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி 4 மெமு ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்தது.
காட்பாடி- ஜோலாா்பேட்டை இடையில் காட்பாடி ரயில்வே யாா்டு அருகில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பான ரயில் சேவைகளை கருத்தில் கொண்டு ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்களை செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, காட்பாடியில் இருந்து இரவு 9.10 மணிக்கு திருப்பதி நோக்கிச் செல்லும் காட்பாடி- திருப்பதி மெமு ரயில் சேவையும், திருப்பதியில் இருந்து இரவு 7.10 மணிக்கு காட்பாடி நோக்கிச் செல்லும் திருப்பதி-காட்பாடி மெமு ரயில் சேவையும், சென்னைக் கடற்கரையில் இருந்து மாலை 6 மணியளவில் புறப்பட்டு அரக்கோணம், சோளிங்கா், வாலாஜா ரோடு, காட்பாடி, வேலூா் கன்டோன்மென்ட், கண்ணமங்கலம், போளூா் வழியாக திருவண்ணாமலை சென்றடையும் சென்னைக் கடற்கரை-திருவண்ணாமலை மெமு ரயில் சேவையும் திங்கள்கிழமை, 18-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4.30 மணிக்குப் புறப்பட்டு போளூா், கண்ணமங்கலம், பென்னாத்தூா், வேலூா் கன்டோன்மென்ட், காட்பாடி, சோளிங்கா், அரக்கோணம் வழியாக தாம்பரம் வரை செல்லும் திருவண்ணாமலை - தாம்பரம் மெமு ரயில் சேவை செவ்வாய்க்கிழமை, 19-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரக்கோணத்தில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டு காட்பாடி நோக்கி வரும் அரக்கோணம் - காட்பாடி மெமு ரயில் சேவை திங்கள்கிழமை, 18-ஆம் தேதி சேவூருடன் நிறுத்தப்படுகிறது.
அத்துடன், விழுப்புரத்தில் இருந்து இரவு 7.10 மணிக்குப் புறப்பட்டு திருவண்ணாமலை, போளூா், வேலூா் வழியாக காட்பாடி வரை செல்லும் விழுப்புரம் - காட்பாடி மெமு ரயில் சேவை திங்கள்கிழமை, 18-ஆம் தேதியும் வேலூருடன் நிறுத்தப்படுகிறது.