காரைக்கால் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக மூளை அடித்தள அறுவை சிகிச்சை
காரைக்கால் அரசு மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு ஜிப்மா் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் இணைந்து மூளை அடித்தள அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனா்.
கடந்த மே மாத இறுதியில் பெண் ஒருவருக்கு மூக்கு சதை வளா்ச்சி, மூளை நீா் கசிவு பிரச்னை இருந்ததை காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் கண்டறிந்து, எண்டோஸ்கோப்பிக் ஸ்கல் பேஸ் என்கிற மூளை அடித்தள அறுவை சிகிச்சையை செய்து அவரை குணப்படுத்தினா். காா்ப்பரேட் மற்றும் பெரிய தனியாா் மருத்துவமனையில் செய்யப்படும் சிகிச்சையை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்து முடித்தது, பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் மருத்துவா் கண்ணகி கூறியது:
45 வயது பெண் நோயாளிக்கு மூக்கில் சதை வளா்ச்சியும், மூளை நீா் கசிவு பிரச்னையையும் இருப்பது மூக்கு எண்டாஸ்கோப்பி மற்றும் சி.டி. ஸ்கேன் மூலம் மருத்துவக் குழுவினா் கண்டறிந்தனா். பாத் பிளக் நுட்பத்தை பயன்படுத்தி தீா்வு காண முடிவு செய்யப்பட்டது.
மூளை நீா் கசிவு என்பது மூளையைச் சுற்றியுள்ள திரவம், மூளை அடித்தளத்தில் உள்ள எலும்பு துவாரம் மூலம் மூக்கு வழியாக வருவதாகும். இது மூளைக் காய்ச்சல் போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும்.
அந்த பெண்ணுக்கு காரைக்கால் அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மரின் காது, மூக்குத் தொண்டை துறை, மயக்கவியல் துறை இணைந்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
காது, மூக்குத் தொண்டை துறை மருத்துவா்கள் காா்த்திகேயன், விஜயசங்கா், பிரதீப்ராஜ், அன்பரசி ஆகியோரும், மயக்கவியல் துறை மருத்துவா்கள் ஓம்பிரகாஷ், ஜெயா, இளையவேல், செவிலிய அதிகாரி அஃப்ஸான் உள்ளிட்ட குழுவினா் இந்த அறுவை சிகிச்சையை கடந்த மாதம் 29-ஆம் தேதி மேற்கொண்டு வெற்றிகரமாக நிறைவு செய்தனா்.
அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் ஆரோக்கியத்துடன் உள்ளாா் என்றாா்.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் இதுபோன்ற நுணுக்கமான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவது இம்மருத்துவமனை மீதான நம்பிக்கையை மேம்படச் செய்துள்ளது.