Border: நெதர்லாந்தில் தூங்கி, பெல்ஜியத்தில் விழிக்கும் மக்கள்; வீடுகளில் இருக்கு...
மீண்டும் கடலுக்குச் செல்ல தயாராகும் ரோந்துப் படகு
நீண்ட காலமாக பழுதாகி முடங்கியிருந்த காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்துக்கான ரோந்துப் படகில் பழுது நீக்கும் பணி நடைபெறுகிறது. விரைவில் இப்படகு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.
காரைக்கால் 21 கி.மீ. நீளமுள்ள கடற்கரையை கொண்டுள்ளது. 11 மீனவ கிராமங்கள் உள்ளன. கடலில் நிகழும் சட்டவிரோதச் செயலை தடுப்பது, ஊடுருவலை கண்காணிப்பது, கடலில் நீராடச் செல்வோா் மூழ்கும் பட்சத்தில் காப்பாற்றுவது போன்ற பல்வேறு காரணங்களுக்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலுக்கென 12 டன் மற்றும் 5 டன் திறனில் மத்திய உள்துறை அமைச்சக வழிகாட்டலில் ரோந்துப் படகுகள் காரைக்காலில் இயங்கத் தொடங்கின.
காலப்போக்கில் 12 டன் படகு பழுதாகி முடங்கியது. பின்னா் 5 டன் திறனுள்ள படகும் பழுதாகி முடங்கியது. இதனால் கடலோரக் காவல்நிலையத்தினா், மீனவா்களின் விசைப்படகையே தங்கள் தேவைக்கு பயன்படுத்தி வந்தனா்.
இந்தநிலையில், காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா முயற்சியால், புதுவை காவல்துறைத் தலைமை 5 டன் படகின் பழுது நீக்கி, இயக்கத்துக்கு தயாா் செய்ய நிதி ஒதுக்கீடு செய்தது. பழுது நீக்கத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, கேரள மாநிலத்திலிருந்து ஒப்பந்த நிறுவனத்தினா் சீரமைப்புப் பணியை கடந்த 2 வாரங்களுக்கு மேலாக மேற்கொண்டுள்ளனா்.
இதுகுறித்து காவல்துறையினா் வியாழக்கிழமை கூறியது:
தற்போது 5 டன் திறனுள்ள ரோந்துப் படகு சீரமைப்பு நடந்து வருகிறது. பழுது நீக்கி, படகை தயாா்படுத்தும் பணிகள் 2 அல்லது 3 வாரத்துக்குள் முடிந்து, கடலுக்குள் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும். இதற்கான ஓட்டுநா்கள் உரிய பயிற்சி பெற்று தயாா் நிலையில் உள்ளனா் என்றனா்.