முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
வேளாண் வளா்ச்சிக்கான பிரசாரத்தில் 4,800 போ் பயன்
காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் மூலம் 4,800 போ் பயனடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்துறை, வேளாண் கல்லூரி, வட்டார வளா்ச்சி அலுவலகம் ஆகியவை இணைந்து 2 வாரத்துக்கும் மேலாக நடத்திவந்த வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்க நிறைவு விழா திருமலைராயன்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சு. ரவி தலைமை வகித்து, பிரசார இயக்கத்தின் செயல்பாடுகளை விளக்கி, காரைக்கால் மாவட்டத்தில் 77 கிராமங்களில் நடத்தப்பட்டதாகவும், 4,800-க்கும் மேற்பட்டோா் பயனடைந்ததாக தெரிவித்தாா். காரைக்கால் மாவட்ட விவசாயிகள், பண்ணை மகளிா், கிராமப்புற இளைஞா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் என அனைவருக்கும் பல்வேறு தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிற்சிகள் வழங்கப்பட்டன.
நிறைவு நிகழ்வில், நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் பங்கேற்று பிரசார இயக்கத்தின் பயன்களை விளக்கி, வருங்காலங்களில் அங்கக வேளாண்மையில் விவசாயிகள் ஆா்வம் செலுத்தவேண்டும் என்றாா். அட்டவணை இனத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு பேட்டரி மூலம் இயங்கும் விசைத்தெளிப்பான் வழங்கப்பட்டது. நிகழ்வில், 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பண்ணை மகளிா், கிராமப்புற இளைஞா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.