Pahalgam Attack: பாகிஸ்தான் வான் வழி விமான பயணத்தை தவிர்த்த மோடி.. காரணம் என்ன?
காஷ்மீர் தாக்குதல்: அமித் ஷாவிடம் நிலைமையை கேட்டறிந்தார் ராகுல்!
பெஹல்காமின் தற்போதைய நிலைமையை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த கொடூர தாக்குதலில் 2 வெளிநாட்டவர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக ஜம்மு - காஷ்மீரில் முகாமிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டறிந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில்,
”உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் கர்ரா ஆகியோரிடம் பெஹல்காம் சம்பவம் குறித்து பேசினேன். தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தேன்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி மற்றும் நமது முழு ஆதரவு தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி தெரிவித்ததாவது:
“பயங்கரவாதத்திற்கு எதிராக முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் நிலைமை இயல்பு நிலையில் இருப்பதாக வெற்றுச் செய்திகளை வெளியிடாமல், அரசு முழுப் பொறுப்பை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, அப்பாவி இந்தியர்கள் இதுபோன்று தங்கள் உயிரை இழக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்கா பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.