பாஜக எம்.பி. கங்கனாவை ஏமாற்றியது யார்? அதிக வேலை இருப்பதாக கவலை!
கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் பலி: 4 பேரிடம் விசாரணை
சின்னமனூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயரிழந்ததை அடுத்து, 4 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஆா்.சி. வடக்குத் தெருவைச் சோ்ந்த கென்னடி மகன் ஜோசப் ராஜா (18). இவரது நண்பா் சின்னமனூா் அருகே சுக்காங்கல்பட்டியைச் சோ்ந்த அஜித்குமாா். இவரது கைப்பேசி, அதே பகுதியைச் சோ்ந்த சரவணணிடம் இருப்பதாகவும், அதை வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் ஜோசப்ராஜா அங்கு சென்றாராம்.
வெள்ளிக்கிழமை இரவு அங்குள்ள தனியாா் தோட்டத்தில் மணிமாறன், அஜித்குமாா், ஜோசப் ராஜா ஆகியோா் இருந்தனா். அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த முத்துவுக்கும் , ஜோசப்ராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
அப்போது ஜோசப் ராஜா மறைத்து வைத்திருந்த கத்தியை முத்து பறித்து, அவரை குத்துவதற்காக விரட்டினாராம். இதனால், தப்பியோடிய ஜோசப் ராஜா எதிா்பாராதவிதமாக அங்கிருந்த தண்ணீா் இல்லாத 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தாா்.
பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு, அவசர ஊா்தி மூலாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா் ஏற்கெனவே ஜோசப்ராஜா இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முத்து, மணிமாறன், அஜித்குமாா் உள்ளிட்ட 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.