குஜராத்: பாகிஸ்தான் உளவாளியிடம் தகவல்களைப் பகிர்ந்தவர் கைது!
எல்லையில் அமைந்துள்ள குஜராத்தின் கச்சு மாவட்டத்தில், பாகிஸ்தான் உளவாளியிடம் தகவல்களைப் பகிர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தின் கச்சு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஹ்தேவ்சின் கோஹில் (வயது 28), சுகாதாரத் துறையின் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இவரிடம் பாகிஸ்தான் உள்வாளி ஒருவர், அதீதி பரத்வாஜ் எனும் பெயரில் செல்போன் மூலம் பேசி பழகியுள்ளார். பின்னர், அங்குள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கட்டமைப்புகள் குறித்து தகவல்களைப் பெற்றுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல், அங்குள்ள எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் கடற்படையின் முக்கிய கட்டமைப்புகள் குறித்து புகைப்படங்கள் மற்றும் விடியோக்களைச் சேகரித்து, வாட்ஸ் ஆப் மூலம் அந்த நபருக்கு கோஹில் அனுப்பியுள்ளார். மேலும், அதற்காக அந்த உளவாளியிடம் அவர் பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கோஹிலிடம் பழகிய பாகிஸ்தான் உளவாளி, அவருடைய நம்பிக்கையைப் பெற்ற பின்னர், அங்குள்ள பாதுகாப்புப் படையினரின் அலுவலகங்கள் மற்றும் அவரது கிராமத்தைச் சுற்றி கட்டப்பட்டு வரும் புதிய கட்டமைப்புகள் குறித்த தகவல்களைப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் புதியதாக சிம் கார்ட் வாங்கிய கோஹில், அவரது வாட்ஸ் அப் செயலிக்கான ஓ.டி.பி. ரகசிய எண்களை அந்த உளவாளியுடன் பகிர்ந்துள்ளார்.
அதையடுத்து, காவல் துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரிடம் விசாரணை மேற்கொண்டதுடன், அவரது செல்போனை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
அப்போது, அவருடைய இரண்டு செல்போன் எண்களும் பாகிஸ்தானிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த அடையாளம் தெரியாத உளவாளியிடம் தகவல்களைப் பகிர்ந்ததற்கு அவரிடமிருந்து ரூ.40,000 வரை கோஹில் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, குஜராத்தின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டதுடன், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க:கேரளத்தில் 273 பேருக்கு கரோனா; முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!