குஜராத் பேரவையில் மோதல்: பாலியல் வழக்கில் பாஜக எம்எல்ஏவை கைது செய்ய காங்கிரஸ் கோரிக்கை
குஜராத்தில் பாஜக எம்.எல்.ஏ. மீதான பாலியல் வழக்கில் அவரை கைது செய்யுமாறு, அம்மாநில அரசுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
குஜராத் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, பெண்கள் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் மேவானி கூறியதாவது ``2020 ஆம் ஆண்டில், பஞ்ச்மஹால் மாவட்டத்தில் பட்டியலினச் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. கஜேந்திரசின் பர்மர், மார்ச் 27 ஆம் தேதியில் சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவடைவதற்குள் கைது செய்யப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றவாளி, எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், மாநில அரசு அவரை ஏன் கைது செய்யவில்லை?
பர்மர் மீது முதல் தகவல் அறிக்கை சமர்ப்பித்தபோது, காவல் நிலையத்துக்குள் நுழைந்த சிலர், முதல் தகவல் அறிக்கை புத்தகத்தில் இருந்து பர்மர் மீதான தகவல் அறிக்கையைக் கிழித்தெறிந்தனர். காவல்துறையினரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, பட்டியலினத் தலைவர் வால்ஜிபாய் படேல் கேள்வியெழுப்பிய பின்னர்தான், விசாரணை நடத்தப்பட்டது. குஜராத்தில் பெண்கள் இப்படித்தான் மதிக்கப்படுகின்றனர்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது: அண்ணாமலை
குஜாராத் மாநிலம் காந்திநகரில் 2020, ஜூலை 30 ஆம் தேதியில் பட்டியலினச் சிறுமி ஒருவரை, பர்மர் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, வீட்டுக்கு அழைத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரை பர்மர் திருமணம் செய்துகொள்ள மறுத்ததாகவும் புகாரில் கூறியுள்ளனர். தொடர்ந்து, சிறுமியுடனான தொடர்பைப் புறக்கணித்ததுடன், சிறுமிக்கு பர்மர் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குஜராத் உயர்நீதிமன்றம் வரையில் சென்றதையடுத்து, கடந்த ஆண்டில்தான் பர்மர் மீது பாலியல் வழக்கு மற்றும் பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.