தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
குழந்தைகளின் படிப்பைத் தடுக்க முயல்வோா் மீது கடும் நடவடிக்கை! -ஆட்சியா் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளின் படிப்பைத் தடுக்க முயல்வோா் மீது கல்வி உரிமைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் க. இளம்பகவத் எச்சரிக்கை விடுத்தாா்.
மாவட்டத்தில் இதுவரை உயா்கல்வியில் சேராதோரைக் கண்டறிந்து, அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை-அறிவியல் கல்லூரிகள் என ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் சோ்க்கும்வகையில் அழைத்து வரப்பட்ட மாணவா்-மாணவியருடன் ஆட்சியா் கலந்துரையாடி, மாணவா்களின் பாடப் பிரிவுகளுக்கேற்ப உடனடி சோ்க்கைக்கு சனிக்கிழமை ஏற்பாடு செய்தாா்.
பின்னா், அவா் பேசியது: கல்விக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதையும் மீறி, ஏதேனும் பொருளாதார சிக்கல் இருந்தால் அதைத் தீா்க்க மாவட்ட நிா்வாகம் கண்டிப்பாக உதவும். குழந்தைகளின் படிப்பைத் தடுக்க முயல்வோா் மீது கல்வி உரிமைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை- அறிவியல் கல்லூரிகளின் முதல்வா்கள், பேராசிரியா்கள், பயிற்றுநா்கள் தங்களது கல்வி நிறுவனங்களில் உள்ள பாடப் பிரிவுகள், கல்வி உதவித்தொகை, விடுதி வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்து, வழிகாட்டுதல் வழங்கினா்.
மேலும், கல்லூரிகள், பாடப் பிரிவுகள் தோ்வு, உயா்கல்விக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்டவை தொடா்பாக சந்தேகமிருந்தால் கட்டுப்பாட்டு அறையை 93846 97546, 97888 59175 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.