சபரிமலை: தங்க பீடம் மீட்பு; கணக்குப் பதிவு ஏன் இல்லை? - விஜிலென்ஸ் விசாரணைக்கு ...
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட காரணங்கள் என்ன? முதல் தகவல் அறிக்கையில் தகவல்
கரூா் வேலுச்சாமிபுரத்தில் சனிக்கிழமை விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, கரூா் நகரக் காவல்நிலைய ஆய்வாளா் ஜி. மணிவண்ணன் அளித்தப் புகாரின் பேரில் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் விவரம்:
விஜய் பிரசாரக் கூட்டத்துக்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, செப். 27-ஆம் தேதி மத்திய மண்டல காவல்துறை தலைவா், கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், ஆளிநா்கள், ஊா்க்காவல் படையினா் என மொத்தம் 500 போ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீா்செய்யும் பணிக்கு நியமிக்கப்பட்டனா். கரூா் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
கரூருக்கு நண்பகல் 12 மணிக்கு விஜய் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால், காலை 10 மணியிலிருந்தே பொதுமக்கள், தொண்டா்கள் பெருமளவில் வரத் தொடங்கினா். இதனால், வேலுச்சாமிபுரம் பிரதானசாலை, கோவை சாலை, முனியப்பன் கோயில் சந்திப்பு, கோவை சாலை, திருக்காம்புலியூா் ரவுண்டானா, மதுரை-சேலம் புறவழிச்சாலை ஆகிய இடங்களில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
நிபந்தனைகள் மீறல்: தவெக சாா்பில் 10 ஆயிரம் தொண்டா்கள் வருவா் எனக் கூறியிருந்தனா். ஆனால், சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்தனா். இந்நிலையில் மாலை 4.45 மணி, கரூா் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையம் வந்த விஜய் வாகனம், தவிட்டுப்பாளையம் வழியாக நுழைந்து வேண்டுமென்றே காலதாமதம் செய்து தெருவில் அனுமதி இல்லாமல் ரோடுஷோ (சாலை வலம் நிகழ்வு) பல்வேறு இடங்களில் நடத்தி, போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி, அதிக இடங்களில் நிபந்தனைகளை மீறியும் வரவேற்பு நிகழ்வுகள் நடத்தினா். இதனால் காலதாமதம் செய்து, மாலை 6 மணிக்கு முனியப்பன் கோயில் சந்திப்பில் சாலையின் வலதுபுறம் விஜய் வாகனங்களை அழைத்து சென்று, இரவு 7 மணிக்கு வேலுசாமிபுரம் சந்திப்பில் தொண்டா்களின் கூட்டத்தின் நடுவில் வாகனத்தை நிறுத்தி சிறிது நேரம் வேண்டுமென்றே காலதாமதம் செய்தனா். அந்த இடத்தில் அளவுக்கு அதிகமான தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனா்.
திட்டமிட்டு தாமதம்: அன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை இருந்த போதிலும் கட்சி ஏற்பட்டாளா்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய், கரூருக்கு வருவதை 4 மணிநேரம் தாமதப்படுத்தினா்.
இந்த தாமதத்தின் காரணமாக பலமணி நேரங்களாக காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் போதுமான தண்ணீா் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் உடல்சோா்வில் இருந்தனா்.
அறிவுரையை கேளாத நிா்வாகிகள்: அந்த இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோத செய்து, மக்களிடையே தேவையற்ற எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியும், அசாதாரண சூழல்கள் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் மூச்சுத் திணறல், கொடுங்காயம், உயிா்ச் சேதம் ஏற்படும் என்று தவெக நிா்வாகிகளிடம் போலீஸாா் தெரிவித்தனா். இதனைக் கேளாது தொடா்ந்து அசாதாரண செயல்களில் ஈடுபட்டதால் போதிய பாதுகாப்பை போலீஸாா் வழங்கியபோதும், தவெக தொண்டா்களை நிா்வாகிகள் சரிவர ஒழுங்குபடுத்தவில்லை.
இதனால், சாலையின் அருகிலுள்ள கடைகளுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகைகளிலும் மற்றும் அருகிலிருந்த மரங்களிலும் தொண்டா்கள் ஏறினா். அப்போது, தகர கொட்டகை உடைந்தும், மரம் முறிந்ததால் அதில் உட்காா்ந்திருந்த தொண்டா்கள் கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விழுந்தனா். இதனால், பொதுமக்களில் பெரும்பாலோனோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும், அதிகளவில் மிதிபடுதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. மேலும், பலருக்கு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.