கேரளத்தின் 14 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகை!
மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வருகின்றது. இதனால், இன்று (மே 7) நாடு முழுவதும் போர் கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள் துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி, கேரளத்திலுள்ள 14 மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஒத்திகைகள் இன்று (மே 7) நடத்தப்பட்டுள்ளன. அதில், எர்ணாக்குளம் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் இந்தப் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன. அபாய ஒலி மூலம் துவங்கிய இந்த ஒத்திகையின்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருளடையச் செய்யப்பட்டது.
மேலும், கட்டடத்தின் மேல் தளங்களில் நெருப்பு உண்டாக்கப்பட்டு அதனால் பரவிய புகைகளுக்கு இடையே மக்களை வெளியேற்றி போர்காலத்தில் தேவையான அத்தியாவசிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், தீயணைப்புப் படையினர், காவல் துறையினர் மற்றும் பொது பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், அம்மாவட்ட ஆட்சியரும் பங்குப்பெற்று இந்த முழு ஒத்திகையையும் அவர் மேற்பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த ஒத்திகையில் ஒருவர் படுகாயமடைந்ததைப் போல் சித்தரிக்கப்பட்டு அவருக்கு தேவையான முதலுதவி வழங்குவது மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்வது உள்ளிட்ட அவசரக் கால செயல்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டன.
பின்னர், அந்தக் கட்டடத்தில் உருவாக்கப்பட்ட தீயானது உரிய தீயணைப்பு இயந்திரங்கள் மூலம் அணைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த ஒத்திகைகள் அனைத்தும் போர் உள்ளிட்ட அவசரகாலங்களில் எவ்வாறு விரைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பஹல்காம் தாக்குதல்: சுற்றுலாப் பயணிகள், மக்கள் ஆதாரங்களை வழங்கலாம்!