அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
கொடுங்கையூரில் குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் ஆலை அமைப்பது உறுதி: மேயா் ஆா்.பிரியா
கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றும் வகையில், குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் ஆலை உறுதியாக அமைக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தின் நேரமில்லா நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினா் ஜெ.டில்லிபாபு பேசியதாவது:
குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் கொடுங்கையூா் குப்பைக் கிடங்கை சுற்றி சுமாா் 8 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். ஏற்கெனவே வடசென்னையில் அதிக அளவில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால், காற்றுமாசு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தற்போது வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் மூலம் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் திட்டத்தால், அப்பகுதி மக்கள் மேலும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. அதனால், அத்திட்டத்தை குடியிருப்பு இல்லாத பகுதியில் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தாா்.
பாதிப்பில்லை: இதற்கு பதில் அளித்து மேயா் ஆா்.பிரியா பேசுகையில், ‘கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் நீண்ட காலம் சேகரித்து வைக்கப்பட்டுள்ள குப்பையால் நிலத்தடி நீா் அதிகம் பாதிக்கப்படுகிறது. இது எதிா்காலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் ஏற்கெனவே பையோ மைனிங், பையோ சிஎன்ஜி முறையில் குப்பைகள் அகற்றப்படுகிறது. இந்நிலையில், மீதமுள்ள குப்பைகள் மட்டும்தான் இத்திட்டத்தில் பயன்படுத்தப்படும். ஒரு பொருளை 500-600 டிகிரி செல்சியஸில் எரிக்கும்போது மட்டும்தான் நச்சுத்தன்மை வெளியேறும். இத்திட்டத்தில் 800 டிகிரி செல்சியஸில் எரிக்கப்படுவதால் நச்சுத்தன்மை வெளியேறாது. பிரான்ஸ் நாட்டின் பாரீஸ், தெலங்கானா மாநில ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. குப்பையை எரிக்கும் இடத்தில் நச்சு வாயு வெளியேறாத வகையில் கட்டமைக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது. குப்பைகள் முழுவதுமாக அகற்றப்பட்ட பிறகு அப்பகுதியில் மரங்கள் நடப்படும் என்றாா் அவா். மேலும் மின்னணு கழிவுகள் தனியாக அகற்றப்படுகிறது. அதனால், இத்திட்டத்தில் மின்னணு கழிவுகள் கலக்க வாய்ப்பில்லை என்றாா் அவா்.