60 வயசுக்கு மேல மாசாமாசம் உங்களுக்கு பென்ஷன் வேணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!
அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
கொங்கு மண்டலத்தின் ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூர்த்தி நாயனார், தேவார திருப்பதிகம் பாடி மீண்டும் உயிர்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் திருத்தலம் விளங்குகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு தேர்த்திருவிழா வேத பாராயணம், பஞ்ச வாத்தியம் முழங்க கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.
கொடியேற்றத்தை ஒட்டி, விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், கருணாம்பிகையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

இதைத்தொடர்ந்து 2-ஆம் தேதி மாலை சூரிய, சந்தர மண்டல காட்சி, 3-ஆம் தேதி அதிகார நந்தி, கிளி, பூதம் அன்னபச்சி வாகன காட்சிகள், 4-ஆம் தேதி புஷ்ப பல்லக்கு நடைபெற உள்ளது.
5-ஆம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல், கரிவரதராஜப் பெருமாள் கோயில் கொடியேற்றம் ஆகியவை நடைபெற உள்ளன. 6-ஆம் தேதி இரவு கற்பகவிருட்சம், சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற உள்ளன.
7-ஆம் தேதி காலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 8-ஆம் தேதி காலை தொடங்கி, வடக்கு ரத வீதியில் தேர் நிறுத்தப்படும். 9-ஆம் தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், தேர் நிலை சேறுதல் நிகழ்ச்சி நடைபெறற உள்ளது. 10- ஆம் தேதி காலை 8 மணிக்கு கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், கரிவரதராஜப் பெருமாள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11-ஆம் தேதி பரிவேட்டை, 12-ஆம் தேதி இரவு தெப்பத் தேர் உற்சவம், 13-ஆம் தேதி நடராஜப் பெருமான் மகா தரிசனம், 14-ஆம் தேதி மஞ்சள் நீர், இரவு மயில் வாகனக்காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.