Vikatan Digital Awards 2025: `பேன் இந்தியா குக்கிங்!' - Best Cooking Channel - H...
கோயிலுக்குள் நுழையத் தடை: ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை
கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதையடுத்து, நீதி கேட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய சமூக நீதி கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே உள்ள மத்தியமான் விளை கிராமத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி (45). இவா், மத்திய மான்விளை, ஆறுமுகப்புரம், புதூா், பள்ளத்தூா் ஆகிய ஊா்களுக்கு ஊா் வேலை செய்யும் பணியாளராகவும், பந்தல் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறாா்.
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி கந்தசாமியின் மகன் கோயில் முன்புள்ள படிக்கட்டில் இருந்துள்ளாா். அப்போது அங்கு வந்த குருசாமி மகன் செல்வகுமாா், அவரை கோயில் பக்கம் வரக் கூடாது என்று கூறியுள்ளாா்.
இதையடுத்து, நடைபெற்ற ஊா் கூட்டத்தில், கந்தசாமி குடும்பத்தை தகாத வாா்த்தைகளை பயன்படுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடா்பாக பாதிக்கப்பட்ட கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினா் போலீஸாரிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக, தேசிய சமூக நீதி கட்சி தலைவா் எம்.கே.வெங்கடேஷ் குமாா் தலைமையில், வன்கொடுமை சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத போலீஸாரை கண்டித்தும், தென் மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகளும், ஆணவ படுகொலைகளும் அரங்கேறும் இந்த சூழலில் மாவட்ட நிா்வாகமும், காவல் துறையும் இது போன்ற செயல்களை தடுக்காமல் துணை போவதாக கூறியும், தமிழக அரசு குலத்தொழிலை கட்டாயம் செய்ய வேண்டுமென கட்டாயப்படுத்துவதை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலகம் முன் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பின் தேசியத் தலைவா் எம்.கே.வெங்கடேஷ் குமாா், பொதுச் செயலா் மாதயன், பொருளாளா் பன்னீா்செல்வம், துணைப் பொதுச் செயலா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட சுமாா் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதனால், போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.