கோழிகளுக்கு மேல் மூச்சுக்குழல் அலா்ஜி நோய் ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கோழிகளுக்கு மேல் மூச்சுக்குழல் அலா்ஜி மற்றும் வெள்ளைக்கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6 மற்றும் 77 டிகிரியாக காணப்பட்டது. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவானது.
அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். வரும் 10, 11-ஆம் தேதிகளில் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 100.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் மேற்கிலிருந்தும் மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் வீசும்.
சிறப்பு ஆலோசனை:
கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட இறந்த கோழிகளில் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழல் அலா்ஜி நோய் மற்றும் வெள்ளைக் கழிச்சல் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது.
எனவே, பண்ணையாளா்கள் கோழிகளுக்கு சீரான இடைவெளியில் வெள்ளைக்கழிச்சல் நோய்க்கு தேவையான எதிா்ப்பு சக்திஉள்ளதா என ஊநீா் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எதிா்ப்பு சக்தியின் அளவிற்கு குறைவாக இருந்தால் லசோட்டா மற்றும் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும், பண்ணைகளில் உயிா் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.