கோவையில் விடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழை! இன்றும் ரெட் அலர்ட்!!
கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதையொட்டி இன்றும் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை(ரெட் அலர்ட்) கொடுக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதும் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கேரளம் மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளான கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மழை கொட்டி வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் சின்ன கல்லாறு பகுதியில் அதிகபட்சமாக 213 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சிறுவாணி அடிவாரப் பகுதிகளில் 128 மில்லி மீட்டர் மழையும், வால்பாறை பி.ஏ.பி. பகுதியில் 114 மில்லி மீட்டர், வால்பாறை தாலுகாவில் 109 மில்லி மீட்டர் மழையும் வால்பாறை சின்கோனா 124 மில்லி மீட்டர், சோலையார் அணைப்பகுதியில் 99 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மேலும் ஆனைமலையில் 28 மில்லி மீட்டர், மதுக்கரை தாலுகாவில் 43.20 மில்லி மீட்டரும், ஆழியார் பகுதியில் 60.20 மில்லி மீட்டர், பொள்ளாச்சி மக்கினம்பெட்டியில் 80 மில்லி மீட்டர், பொள்ளாச்சி தாலுகாவில் 41 மில்லி மீட்டர், மேட்டுப்பாளையம் பில்லூர் அணைப் பகுதியில் 22 மில்லி மீட்டர், மேட்டுப்பாளையத்தில் 18 மில்லி மீட்டர், சூலூர் பகுதியில் 18.40 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
மேலும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்பொழுது வரை சாரல் மழை பெய்து கொண்டு உள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.