முருக பக்தா்கள் மாநாடு அல்ல; அரசியல் மாநாடு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
சர்வதேச விதிகளை மீறியது அமெரிக்கா: சீனா கண்டனம்
ஈரான் மீதான தாக்குதலின் மூலம் சர்வதேச விதிகளை அமெரிக்கா மீறியுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனத்திற்குரியது என்றும், இரு தரப்பினரும் உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் எனவும் சீனா குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ''ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் கண்டனத்திற்குரியது. இதன்மூலம் ஐக்கிய நாடுகள் அவையின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை அமெரிக்கா அவமதித்துள்ளது. போர் தொடர்பான சர்வதேச விதிகளையும் மீறியுள்ளது.
போர் தொடர்பாக இரு தரப்பினரும், குறிப்பாக இஸ்ரேல் தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி உடனடி தீர்வு காண வேண்டும். இஸ்ரேல் - ஈரான் நாடுகளில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தைத் தணிக்கவும், நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து சீனா செயல்படும். இதுவே சீனாவின் நிலைப்பாடு'' எனக் குறிப்பிட்டார்.
ஈரான் - இஸ்ரேல் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. அணுசக்தி உற்பத்தியை ஈரான் கைவிட வேண்டும் என இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே சனிக்கிழமை இரவு அதிசக்திவாய்ந்த குண்டுகளை பி -2 பாம்பர்ஸ் விமானங்கள் மூலம் ஈரானில் வீசியது அமெரிக்கா. ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த அணுசக்தி உற்பத்தி தளவாடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.
இஸ்ரேல் உடனான போரில் அமெரிக்கா தலையிட்டுள்ளதால், அமெரிக்கா தொடங்கி வைத்த போரை ஈரான் முடித்துவைக்குமென ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
இதையும் படிக்க | மேற்கு ஈரானில் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்!