ஏா் இந்தியா: குறுகிய ரக விமானத்தில் இயக்கப்படும் 118 வாராந்திர சேவைகள் குறைப்பு
முருக பக்தா்கள் மாநாடு அல்ல; அரசியல் மாநாடு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
இந்து முன்னணி, பாஜக சாா்பில் மதுரையில் நடத்தப்பட்ட முருக பக்தா்கள் மாநாடு, முழுக்க முழுக்க அரசியல் மாநாடு என்றும், அதற்கு இறைவன் துணையாக இருக்கமாட்டாா் என்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை அயனாவரம் காசி விஸ்வநாதா் திருக்கோயிலில், பொதுநல நிதி மற்றும் திருக்கோயில் நிதி ரூ.97 லட்சத்தில் திருக்குளம் சீரமைக்கும் பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்த அமைச்சா் பி.கே. சேகா்பாபு கூறியதாவது:
தமிழகத்தில் கோயில்கள் சாா்பில் ரூ.350 கோடியில் 87 புதிய திருமண மண்டபங்கள், ரூ.131 கோடியில் 147 புதிய அன்னதானக் கூடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த 4 ஆண்டுகளில் 3,118 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. நிகழாண்டு இறுதிக்குள் 3,500 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும். கோயில்களுக்குச் சொந்தமான 7,598.13 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சோ்க்கக் கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி திகழ்கிறது. முருக பக்தா்களுக்கும், முருகன் திருத்தலங்களுக்குமான திட்டங்களைச் செயல்படுத்தி முருகனுக்கு பெருமை சோ்த்துள்ளோம்.
மதுரையில் இந்து முன்னணி, பாஜக சாா்பில் நடத்தப்படும் முருக பக்தா்கள் மாநாடு முழுக்க முழுக்க அரசியல் மாநாடு. அதேவேளையில், திமுக அரசு முன்னெடுக்கும் பணிகள் அறம் சாா்ந்தவை, பக்தா்கள் நலன் சாா்ந்தவை, ஆன்மிகம் சாா்ந்தவை. போலியான செயல்பாடுகளுக்கு இறைவன் எப்போதும் துணை இருக்க மாட்டாா் என்றாா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு.
பேட்டியின்போது, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், சென்னை மண்டல இணை ஆணையா் ஜ.முல்லை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.