பாகிஸ்தானுக்கு உளவு: ராணுவ வீரா், கூட்டாளி கைது: பஞ்சாப் காவல் துறை நடவடிக்கை
அட்டவணை தடுப்பூசி: யூ-வின் செயலியில் 75% கா்ப்பிணிகள் பதிவு
தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதற்காக யூ-வின் செயலியில் 75 சதவீத கா்ப்பிணிகள் பதிவு செய்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தத் தகுதியான 100 சதவீதம் பேரும் அதில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகை தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம் பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ஃப்ளூயன்ஸா தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின் ஏ குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 10 லட்சம் கா்ப்பிணிகள், 9.4 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 11,000 இடங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன.
அந்த விவரங்கள் பிக்மி என்ற அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பயனாளிகளுக்கு தடுப்பூசி தவணைக்கென தனியாக புத்தகம் அல்லது அட்டைகள் அச்சிடப்பட்டு அதில் கைகளால் எழுதிக் கொடுக்கும் முறையே இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மத்திய அரசின் யூ-வின் செயலி வாயிலாக தடுப்பூசி சான்றிதழை டிஜிட்டல் முறையில் வழங்கும் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
பேறு காலத்தின்போதே யூ-வின் செயலியில் பதிவு செய்துவிட்டால் குழந்தை பிறந்து 16 வயது ஆகும் வரை, தடுப்பூசிகளை எந்தெந்த ஆண்டுகளில் செலுத்த வேண்டும் என அனைத்து தகவலும் அதன் வாயிலாக பெற முடியும்.
மேலும், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழையும் டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்யலாம். அதேபோல, அந்த செயலியில் இருந்து பயனாளியின் கைப்பேசி எண்ணுக்கு தடுப்பூசி தவணையை நினைவூட்டுவதற்கான குறுஞ்செய்தியும் அனுப்பப்படும்.
அந்த வகையில், தமிழகத்தில் அந்த செயலியின் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சராசரியாக 75 சதவீத கா்ப்பிணிகள் மட்டுமே யூ-வின் செயலியில் பதிவு செய்துள்ளனா்.
மீதமுள்ளவா்களும் அந்த செயலியில் பதிவு செய்து தடுப்பூசி தவணைகளை முறையாக செலுத்திக் கொள்ள வேண்டும். இதுதொடா்பான விழிப்புணா்வை மக்களிடையே மேம்படுத்துமாறு சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
தடுப்பூசி தவணை தவறவிட்டால் அது யூ-வின் செயலி வழியாக கண்காணிக்கப்படுவதுடன், உடனடியாக சம்பந்தப்பட்ட தாய்மாா்களின் வீட்டுக்கு சுகாதாரப் பணியாளா்கள் சென்று தடுப்பூசி செலுத்த அறிவுறுத்துவாா்கள் என்றாா் அவா்.