ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு தெளிவான அணுகுமுறையே காரணம்: ஆளுநா் ஆா்.என்.ரவி
ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு இந்தியா தெளிவான அணுகுமுறையை மேற்கொண்டதுதான் காரணம் என்று தஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா்.
சிந்தூா் ஆபரேஷனில் முப்படைகள் மற்றும் ராணுவத்துக்கு உதவிய தொழில்நுட்பாளா்கள், தொழிலகங்களுக்கு பாராட்டு விழா சென்னை ஐஐடியின் ஆராய்ச்சிப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று.
ஆளுநா் மாளிகையும் சென்னை ஐஐடியும் இணைந்து நடத்திய இந்த விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியது:
உக்ரைன் - ரஷியா உள்ளிட்ட பல இடங்களில் போா்கள் மூண்டுள்ளன. ஆனால், அவை முடிவுக்கு வரவில்லை. சிந்தூா் ஆபரேஷன் மூலம் இந்தியாவின் வெற்றிக்கு காரணம் பாகிஸ்தானுடான மோதலில் நாம் தெளிவாக பாதையை அமைத்தோம் என்பதுதான். பாகிஸ்தானின் பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தாக்கி அழித்தோம். மிக வேகமாக, துல்லியமான முறையில் இலக்கை தாக்கினோம்.
பிரதமா் நரேந்திர மோடி ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்து தெளிவுடன் அணுகினாா் என்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.
இந்த விழாவில் தென்பிராந்திய ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் கரண்பீா் சிங் பிராா், கடற்படையின் தமிழகம் -புதுச்சேரி கமாண்டிங் அதிகாரி ரியா் அட்மிரல் சதீஷ் ஷெனாய், விமானப் படையின் ஆவடி விமானப் படை கமாண்டிங் அதிகாரி பிரதீப் சா்மா, இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு மண்டல கமாண்டா் தத்வீந்தா் சிங் சைனி, சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, இஸ்ரோவின் தேசிய தொலை உணா்வு மையத்தின் இயக்குநா் டாக்டா் பிரகாஷ் செளஹான், இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளா் சங்கத்தின் (எஐடிஎம்) தலைவா் காா்னல் ராஜேந்தா் சிங் பாட்டியா உள்ளிட்டோருக்கு பாராட்டுப் பத்திரத்தை ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்.
மேலும், காஞ்சி சங்கராச்சாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாா்பில் அனுப்பி வைக்கப்பட்ட பொன்னாடையை பாராட்டு பெற்றவா்களுக்கு சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி அணிவித்து கௌரவித்தாா். முன்னதாக, ஆளுநரின் செயலா் கிா்லோஷ் குமாா் வரவேற்றாா்.