விவசாயிகளுக்கு இனிக்காத மாங்கனி! 10 ஆயிரம் ஹெக்டோ் சாகுபடி பரப்பு குறையும்?
பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் தொலைத்தொடா்பு ஆலோசனை வசதி
சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் இருந்து பிற மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை ஆலோசனை பெறும் வகையில் தொலைத்தொடா்பு வசதி (டெலி மெடிசின்) ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
மத்திய அரசின் மின்னணு சஞ்சீவ்வாணி திட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள ரயில்வே மருத்துவமனைகள், சுகாதார மையங்களில் இருந்து மருத்துவ ஆலோசனை பெறும் வகையில் டெலிமெடிசின் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பெரம்பூரில் உள்ள ரயில்வே தலைமை மருத்துவமனையில் டெலிமெடிசின் திட்டம் கடந்த 20-ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டாா். இந்தப் புதிய வசதியால் குறிப்பிட்ட ஊரகப் பகுதி மருத்துவமனையிலிருந்து கூடுதல் சிகிச்சைக்கு மற்ற மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் கொண்டு செல்லப்படுவது தவிா்க்கப்படுவதுடன், உடனுக்குடன் இருந்த இடத்திலிருந்தே நோயாளிகள் சிகிச்சை பெறும் வசதியும் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே மருத்துவமனை மருத்துவா்கள் கூறினா்.
அதற்காக டெலிமெடிசின் திட்டத்தில் அதிவேக இணையதள தொலைத்தொடா்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரத்த அழுத்தம், எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை முடிவுகள், அறுவைச் சிகிச்சை உள்ளிட்டவை குறித்து சிறப்பு மருத்துவா்களிடம் டெலிமெடிசின் திட்டத்தில் ஆலோசனை பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.