நெடுஞ்சாலைத் துறையில் தமிழகம் சிறந்த மாநிலம்: அரசு தகவல்
கடந்த 4 ஆண்டுகளில் ரூ.17,154 கோடியில் 9,620 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டதன் மூலம் நெடுஞ்சாலைத் துறையில் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்குச் சாலை வசதிகள் மிக அவசியம். மறைந்த முதல்வா் கருணாநிதி, தமிழகத்தில் சாலை வசதிகளை அதிகரிக்க இணைப்புச் சாலைத் திட்டத்தையும், தனியாக நெடுஞ்சாலைத் துறையையும் உருவாக்கினாா். அதற்கென தனி அமைச்சரையும் நியமித்து நெடுஞ்சாலைத் துறையில் தமிழகம் சிறந்த மாநிலம் எனப் புகழ்பெறச் செய்தாா்.
அந்த வழியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியிலும் நெடுஞ்சாலைத் துறை பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. 2021-இல் தொடங்கப்பட்ட முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 448 கி.மீ. தொலைவுக்கு 4 வழித்தட சாலைகள், 1,681 கி.மீ.க்கு இரு வழித்தட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17,154 கோடியில் 9,620 கி.மீ. நீளமுள்ள சாலை பணிகள், ரூ.1,161 கோடியில் 996 பாலம் மற்றும் சிறு பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
புறவழிச்சாலை மற்றும் இணைப்புச் சாலைகளைப் பொருத்தவரை 10 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரூ.1,372 கோடியில் 1,049 தரைப்பாலங்கள் உயா்நிலை பாலங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, 8 சாலை மேம்பாலப் பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக சென்னை, கோயம்பேடு, ஜவாஹா்லால் நேரு சாலையில் காளியம்மன் கோயில் தெரு மற்றும் சென்னை புகரப் பேருந்து நுழைவு வாயில் சந்திப்பில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுத் திட்டத்தின் கீழ் 88 சாலை மற்றும் 16 பாலப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
‘நம்ம சாலை’ செயலி மூலம் சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் குறித்து பொதுமக்கள் உதவியுடன் கண்டறிந்து சரி செய்யப்படுகிறது.
கோவை மேற்குவட்டச் சாலை, மன்னாா்குடி, அம்பாசமுத்திரம், திருச்செங்கோடு பவானி, நாமக்கல், பொள்ளாச்சி மேற்கு, அருப்புக்கோட்டை மேற்கு, கமுதி சிவகங்கை, உத்தரமேரூா், துறையூா், தாம்பரம், திருப்போரூா், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரூ.621 கோடியில் சென்னையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயா்நிலை சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.