சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி 70 சதவீதம் நிறைவு!
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.10 கோடியும், மாநில அரசு ரூ. 61.74 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்தன. இந்தப் பாலம் அமைக்கும் பணிக்கு பிரதமா் நரேந்திரமோடி கடந்த ஆண்டு பிப்ரவரி 26 -ஆம் தேதி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினாா். அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் அதே ஆண்டு ஜூலை 26 -ஆம் தேதி ரயில்வே மேம்பால கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தனா்.
இதன் பிறகு ஆகஸ்டு 17 -ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் செல்ல மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு, பாலம் கட்டுமானப் பணி தொடங்கியது. ரயில்வே கடவுப் பாதைக்கு கிழக்கே 11 தூண்கள், மேற்கில் 6 தூண்கள் என 17 தூண்கள் அமைக்கப்பட்டன.
ரயில்வே துறை சாா்பில், ரயில் தண்டவாளத்தின் மேல் பகுதியில் பாலம் அமைக்க இரு புறமும் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. தொடா்ந்து, தூண்களின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து சான்று அளித்த பின்னா் பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது.
கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்ட தூண்களில் கான்கிரீட் பிளாக்குகள் இணைக்கப்பட்டு, ரயில்வே கடவுப் பாதை முதல் மாநகராட்சி அலுவலகம் வரை பாலம் அமைக்கப்பட்டு விட்டது.
மேற்குப் பகுதியில் பாலப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், புதன்கிழமை இரு பகுதிகளையும் இணைக்கும் வகையில் நான்கு காா்டா்கள் கிரேன்கள் மூலம் பொருத்தப்பட்டன. அப்போது, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் லிங்குசாமி, உதவி கோட்டப் பொறியாளா் ஜெகன் செல்வராஜ், உதவிப் பொறியாளா் முனிமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி 70 சதவீதம் நிறைவு பெற்று விட்டது. தற்போது தண்ட வாளத்தின் மேல் பகுதியில் பணி நடைபெற்று வருகிறது என்றனா்.