சாம் பித்ரோடாவின் கருத்து காங்கிரஸ் நிலைப்பாடு அல்ல: ஜெய்ராம் ரமேஷ்
சீனா உடனான இந்தியாவின் உறவு குறித்த சாம் பித்ரோடாவின் கருத்து, காங்கிரஸ் நிலைப்பாடு அல்ல என்றும் அது அவரின் தனிப்பட்ட கருத்து எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
சீனா உடனான மோதல் போக்கை இந்தியா கைவிட வேண்டும் என்றும், சீனாவின் அச்சுறுத்தல்கள் மிகைப்படுத்தப்படுவதாகவும், சீனாவை தனது எதிரியாகக் கருதாமல் இந்தியா அங்கீகரிக்க வேண்டும் எனவும் சாம் பித்ரோடா ஆங்கில ஊடகத்துக்கு (ஐ.ஏ.என்.எஸ்.) அளித்திருந்த பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளதாவது,
நமது வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவற்றுக்கு இன்னும் சீனா சவாலாக உள்ளது. சீனா உடனான விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவும், இந்தச் சவால்களைச் சமாளிப்பதற்கான கூட்டு உத்தியை வகுக்கவுமான வாய்ப்பு நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | சீனாவை எதிரியாகக் கருதுவதை இந்தியா நிறுத்த வேண்டும்: சாம் பித்ரோடா