சாம்சங்கிற்கு போட்டியாக மடிக்கக்கூடிய ஆப்பிள் ஐ-போன்! 2026-ல் அறிமுகம்!
சாம்சங் நிறுவனத்துக்குப் போட்டியாக மடிக்கக்கூடிய ஐ-போன்களை ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
ஆப்பிள் ஐ-போன் ஏர், ஐ-போன் ப்ரோ என்ற இரு வகைகளில் உருவாகும் மடிக்கக் கூடிய போன்களை 2026 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டுசெயல்படும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் பிரீமியம் பயனர்கள் உள்ளனர். விலை அதிகம் என்றாலும், அதன் சிறப்பம்சங்களுக்காகவும் தரத்துக்காகவும் ஆப்பிள் பிரான்டை பயன்படுத்துபவர்கள் ஏராளம்
எனினும், ஆப்பிள் நிறுவனத்தை விட கூடுதல் சிறப்பம்சங்களை அறிமுகம் செய்து பயனர்களை தன்பக்கம் ஈர்த்து வருகிறது தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம்.
ஆப்பிள் ஐ-போன்கள் சிறிய அளவில் கூட தயாரிக்கப்பட்டாலும், சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கையடக்க வகையில் இருப்பதால் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், அத்தகைய பயனர்களைக் கவர்வதற்காக மடிக்கக் கூடிய ஐ-போன்களை தயாரிப்பதில் ஆப்பிள் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன்களை 2026 நவம்பரில் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே மடிக்கக் கூடிய வகையிலான ஸ்மார்ட்போன்களை தயாரித்துவரும் நிறுவனங்களில் இருந்து சற்று வேறுபட்டு இருக்கும் வகையில், புதிய அம்சங்களை ஆப்பிள் நிறுவனம் புகுத்தவுள்ளது.
அவற்றிற்கு ஸ்மார்ட் வாட்ச்களுக்கு பெயரிடப்பட்டுள்ளதைப் போன்று, ஐ-போன் ஏர், ஐ-போன் ப்ரோ எனப் பெயர் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இதன் வடிவம் குறித்த எந்தவொரு புகைப்படத்தையோ, விடியோவையோ ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஐ-போன்களுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைப்பது ஏன்?
இதையும் படிக்க | மே மாதத்தில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள்!