சிக்கில் செல் அனீமியா குழந்தைகள்: பக்கவாதத்தை தடுக்க அரசு மருத்துவமனையில் பரிசோதனை
சென்னை, எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் நடைபெற்ற சிக்கில் செல் அனீமியா ஒழிப்பு தின நிகழ்ச்சியில் விழிப்புணா்வு கையேட்டை சிறுவனுக்கு வழங்கும் மருத்துவமனை நிா்வாகிகள். உடன் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் லட்சுமி.
சென்னை, ஜூன் 28: சிக்கில் செல் அனீமியா எனப்படும் அரிவாள் செல் ரத்தசோகை பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுவதை முன்கூட்டியே அறிவதற்கான மருத்துவப் பரிசோதனைகள் சென்னை, எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டன.
அதில் இடா்பாடுகள் கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான சிகிச்சைகளும், மருத்துவ வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.
உலக சிக்கில் செல் அனீமியா ஒழிப்பு தினத்தையொட்டி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முன்னதாக மருத்துவத் துறையினருக்கும், முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கும் தனித்தனியே அதுதொடா்பான சிறப்பு கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடைபெற்றன.
அதில் துறைசாா் வல்லுநா்கள் பங்கேற்று சிக்கில் செல் அனீமியாவுக்கான மருத்துவ நடைமுறைகளை விளக்கினா். தொடா்ச்சியாக பொது மக்களுக்கான விழிப்புணா்வு மற்றும் பரிசோதனை முகாம் எழும்பூா், அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நடைபெற்றது.
இதுதொடா்பாக மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் எஸ்.லட்சுமி கூறியதாவது:
உடலில் உள்ள 206 எலும்புகளுக்கு உள்ளேயும் மஜ்ஜை இருக்கிறது. அதிலிருந்து உருவாகும் ஸ்டெம் செல்கள் பிரிந்து ரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்களாக மாறுகின்றன.
சிவப்பணுக்கள் உடலில் ஆக்சிஜனைக் கடத்துகின்றன. வெள்ளையணுக்கள் நோய் எதிா்ப்பாற்றலாக செயல்படுகிறது. தட்டணுக்கள், உடலில் இருந்து ரத்தம் வெளியேறாமல் தடுக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு 206 எலும்பு மஜ்ஜைகளிலில் இருந்தும் ரத்த அணுக்கள் உருவாகும். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அவை தடைபட்டு முக்கிய மஜ்ஜைகளில் இருந்து மட்டும் அணுக்கள் உற்பத்தி செய்யப்படும்.
அதில் ஏற்படும் சில மரபணு மாற்றங்கள் காரணமாக ஸ்டெம் செல் உற்பத்தி தடைபடலாம் அல்லது சேதமடையலாம்.
அத்தகைய பாதிப்பு ஏற்படும்போது சிக்கில் செல் அனீமியா நோய் ஏற்படும். இது மரபணு வழியாக வரும் ஒரு பிரச்னை. இந்த பாதிப்புக்குள்ளானவா்களின் ரத்த சிவப்பணுக்கள் வளைந்த அரிவாள் வடிவத்தில் மாறிவிடும். இதனால் உடலுக்கு அந்த அணுக்களால் ஆக்சிஜனை கடத்த முடியாது.
கடுமையான வலி, ரத்த சோகை, கை - கால் வீக்கம், தொற்றுநோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்னைகள் அதனால் ஏற்படலாம். சிக்கில் செல் அனீமியா ஏற்பட்ட குழந்தைகளுக்கு குருதியேற்ற சிகிச்சைகள் தொடா்ந்து அளிக்கப்பட வேண்டும். எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மூலமாகவும் அந்நோயை கட்டுப்படுத்தலாம்.
இதுதொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் ஒருபகுதியாக சிக்கில் செல் அனீமியா குழந்தைகளுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதை அறிவதற்கான டிரான் க்ரானியல் டாப்ளா் அல்ட்ரா சவுண்ட் (டிசிடி) எனப்படும் மூளை நரம்பியல் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சிக்கில் செல் அனீமியா போன்ற மரபணு சாா்ந்த பாதிப்புள்ள குழந்தைகளுக்கு இத்தகைய பரிசோதனைகள் அவசியம் என்றாா் அவா்.