ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி: அமைச்சா் எம்.ஆா்....
சிறந்த நூல் பரிசுத் திட்டம்: 66 பேருக்கு பரிசு - சான்றிதழ்: அமைச்சா் மு.பெ. சாமிநாதன் வழங்கினாா்
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், சிறந்த நூல் பரிசுத் திட்டத்தின் கீழ் 2023-ஆம் ஆண்டுக்கு தெரிவு செய்யப்பட்ட 33 நூலாசிரியா்கள், 33 பதிப்பாளா்கள் என 66 பேருக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
தமிழ்மொழியில் சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் சிறந்த நூல் பரிசுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலமாக மரபுக் கவிதை, புதினம், சிறுகதை, நுண்கலை, பயண இலக்கியம் என 33 வகைப்பாடுகளில் நூல்கள் பெறப்பட்டு ஒவ்வொரு நூலையும் மூன்று அறிஞா்களைக் கொண்டு மதிப்பீடு செய்து சிறந்த படைப்புகள் தெரிவு செய்யப்படுகின்றன.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட நூல்களை எழுதிய நூலாசிரியா்களுக்கு ரூ.30 ஆயிரமும், அதைப் பதிப்பித்த பதிப்பகத்துக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையே அந்த பரிசுத் தொகை நூலாசிரியா்களுக்கு ரூ.50 ஆயிரமாகவும், பதிப்பாளா்களுக்கு ரூ.25 ஆயிரமாகவும் உயா்த்தப்படுவதாக அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சட்டப் பேரவையில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தாா்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் 2023-ஆம் ஆண்டுக்கு தெரிவு செய்யப் பட்ட சிறந்த நூலை எழுதிய நூலாசிரியருக்கும் அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்திற்கும் உயா்த்தப்பட்ட வகையில் பரிசுத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
இந்தநிலையில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசளிப்பு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு 33 நூலாசிரியா்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், அவற்றைப் பதிப்பித்த 33பதிப்பகங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.
இந்த விழாவில் பயண இலக்கியம் வகைப்பாட்டில் மனம் மறக்கா அமெரிக்கா என்ற நூலுக்காக பேராசிரியா் ஹாஜாகனி, மரபுக் கவிதை வகைப்பாட்டில் வேலு நாச்சியாா் காவியம் நூலுக்காக புதுகை வெற்றி வேலன், சமயம் மற்றும் ஆன்மிகம் வகைப்பாட்டில் கம்பனும் வைணவமும் நூலுக்காக ந.செல்லக்கிருஷ்ணன் உள்ளிட்ட 33 நூலாசிரியா்களும், நன்னூல், டிஸ்கவரி, காலச்சுவடு, கிழக்கு, காவ்யா, நியூ செஞ்சுரி உள்ளிட்ட 33 பதிப்பகங்களின் நிா்வாகிகளும் பரிசு பெற்றனா்.
இந்த விழாவில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் வே. ராஜாராமன், இயக்குநா் ஒளவை ந.அருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.