சிலரால் மட்டுமே இதனை செய்ய முடியும்; ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு சந்தீப் சர்மா பாராட்டு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை அந்த அணி வீரர் சந்தீப் சர்மா பாராட்டியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டிகள் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு சிறப்பானதாக அமையவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 76 ரன்களை அவர் வாரி வழங்கினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் 2.3 ஓவர்களில் 33 ரன்களை வழங்கினார். இந்த இரண்டு போட்டிகளிலும் ஆர்ச்சர் விக்கெட் கைப்பற்றத் தவறினார்.
இதையும் படிக்க: கொஞ்சம் கொஞ்சமாக தகர்கிறதா சிஎஸ்கேவின் கோட்டை?
இருப்பினும், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
சந்தீப் சர்மா பாராட்டு
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச்சரை சக பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா பாராட்டியுள்ளார்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் குறித்து சந்தீப் சர்மா பேசியதாவது: ஐபிஎல் போன்ற மிகப் பெரிய தொடர்களின் தொடக்கத்தில் நடைபெறும் போட்டிகளில் அதிகப்படியான அழுத்தம் இருக்கும். தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் வலிமையான எதிரணிகளை சந்திக்க வேண்டியிருக்கும். முதல் இரண்டு போட்டிகளில் பதற்றம் அதிகமாக இருக்கும். ஜோஃப்ரா ஆர்ச்சர் விஷயத்தில் அதுதான் நடந்துள்ளது என நினைக்கிறேன்.
இதையும் படிக்க: தோனி எப்போது ஓய்வு பெறுவார்? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
ஆர்ச்சர் உலகத் தரத்திலான பந்துவீச்சாளர் என்பது எங்களுக்கு எப்போதும் தெரியும். அவரது முழுத் திறமையையும் நேற்றையப் போட்டியில் வெளிப்படுத்தினார். அதனை பார்ப்பதற்கு முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. வெகு சிலரால் மட்டுமே இதனை செய்ய முடியும். அணி நிர்வாகம் ஆர்ச்சர் மீது நம்பிக்கை வைத்திருந்தது. அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். இந்த தொடரில் இன்னும் நிறைய போட்டிகள் இருப்பதால், அவர் மேலும் சிறப்பாக செயல்படப் போகிறார் என்றார்.