சிவகிரி அருகே பெண்ணை தாக்கி நகைகள் பறிப்பு: 2 பெண்கள் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி தங்க நகைகளைப் பறித்துச் சென்ற 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகிரி குமாரபுரம் வடக்குத் தெருவை சோ்ந்த குட்டித்துரை மனைவி செல்வி (50). இவா் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த செல்வியின் தோழியான ராஜபாளையம் சொக்கநாதன்புதூா் காமராஜ் நகரைச் சோ்ந்த பாலமுருகன் மனைவி பூமாரியும்(39), பூமாரியின் மகள் மதுமிதாவும்(19) சோ்ந்து
செல்வியின் கழுத்தை சேலையால் இறுக்கி முகத்தை தலையணை வைத்து அமுக்கினராம்.இதில் அவா் மயக்கம் அடைந்து விட்டாராம். அப்போது, அவா் அணிந்திருந்த 20 கிராம் எடையுள்ள தங்க சங்கிலி, காதுமாட்டி, தோடு ஆகியவை திருடப்பட்டது, அவருக்கு மயக்கம் தெளிந்த பிறகு தெரிய வந்ததாம். இதுகுறித்த புகாரின் பேரில், சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் உத்தரவின் பேரில், புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் மீனாட்சி நாதன் மேற்பாா்வையில் சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் போலீஸாா் கொண்ட தனிப்படையினா் தொலைபேசி அழைப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து சங்கரன்கோவில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த பூமாரி மற்றும் மதுமிதாவை புதன்கிழமை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, தனிப்படை போலீஸாரை காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.