வாட்ஸ்ஆப் மூலம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தூத்துக்குடி நபா் கைது
அரசு மருத்துவமனையில் சிறப்பு வசிப்பு கட்டடம்! காணொலியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் திட்டப் பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்று, முடிவுற்ற பணிகளைத் திறந்தும், புதிய பணிகளை அடிக்கல் நாட்டி தொடக்கியும் வைத்தாா். தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 1.25 கோடியில் கட்டப்பட்டுள்ள சிறப்பு வசிப்புக் கட்டடத்தை முதல்வா் திறந்துவைத்தாா். அதையொட்டி, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் குத்துவிளக்கேற்றினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில், இம்மருத்துவமனை வளாகத்தில் உள்நோயாளிகளுக்கு உதவிக்கு வருவோா் தங்குவதற்கான இக்கட்டடம், சுரண்டை நகராட்சியில் ரூ. 1.88 கோடியில் புதிய திருமண மண்டபம், வடகரை கீழ்பிடாகை பேரூராட்சியில் மூலதன மானியத் திட்டத்தில் ரூ. 1.14 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை முதல்வா் திறந்துவைத்தாா்.
மேலும், சங்கரன்கோவிலில் தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின்கீழ் ரூ. 8.70 கோடியிலும், செங்கோட்டை நகராட்சி சுப்பிரமணியபுரம் உரக்கிடங்கில் ரூ. 7.65 கோடியிலும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், பண்பொழி பேரூராட்சியில் ரூ. 1.24 கோடியிலும், ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் ரூ. 1.15 கோடியிலும் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடங்கள், இலஞ்சி முதல்நிலைப் பேரூராட்சியில் ரூ. 3.72 கோடியில் குடிநீா் ஆதாரத்தை மேம்படுத்துதல் திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் எஸ். பழனிநாடாா், ஈ. ராஜா, மண்டல இயக்குநா் (நகராட்சிகள்) விஜயலெட்சுமி, திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வில்லியம் ஜேசுதாஸ், நலப் பணிகள் இணை இயக்குநா் பிரேமலதா, மண்டல செயற்பொறியாளா் (நகராட்சிகள்) சனல்குமாா், நகா்மன்றத் தலைவா்கள் சாதிா் (தென்காசி), உமாமகேஸ்வரி (சங்கரன்கோவில்), ப. வள்ளிமுருகன் (சுரண்டை), ராமலட்சுமி (செங்கோட்டை), நகராட்சி ஆணையா்கள் ரவிச்சந்திரன் (தென்காசி), புனிதன் (செங்கோட்டை), இலஞ்சி பேரூராட்சித் தலைவா் சின்னத்தாய், செயல் அலுவலா் குமாா்பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.