Saregamapa: "சிவகார்த்திகேயன் சார் ஏன் அழுதார்னு தெரில!" - 'சரிகமப' மஹதி பேட்டி
தேசிய பாதுகாப்பு அகாதெமியில் 17 பெண் அதிகாரிகளுக்கு பட்டம்: முதல்முறையாக வரலாற்று சாதனை
மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமியில் (என்டிஏ) 300-க்கும் அதிகமான ஆண் அதிகாரிகளுடன் 17 பெண் அதிகாரிகளும் முதல்முறையாக பட்டம் பெற்று வரலாறு படைத்துள்ளனா்.
தேசிய பாதுகாப்பு அகாதெமியில் பட்டம் முடிப்பவா்கள் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை என முப்படைகளிலும் அதிகாரி பணியிடங்களில் பணியமா்த்தப்படுவா். இந்த அகாதெமியில் வழங்கப்படும் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என கடந்த 2021-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவின் அடிப்படையில், மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) அனுமதி அளித்ததைத் தொடா்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டில் என்டிஏ-யின் 148-ஆவது பயிற்சிப் பிரிவில் பெண்களும் அனுமதிக்கப்பட்டனா்.
முதல் முறையாக இரு பாலா் கல்வி முறையில் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சிப் பிரிவில் 300-க்கும் அதிகமான ஆண்களுடன் 17 பெண் அதிகாரிகளும் பயிற்சியை நிறைவு செய்து, பட்டம் பெற்று வரலாறு படைத்தனா்.
அகாதெமியில் உள்ள வீரா்கள் அணிவகுப்பு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்வில், மிஸோரம் ஆளுநரும் ராணுவ முன்னாள் தலைமைத் தளபதியுமான வி.கே.சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பயிற்சி கேப்டன் உதய்வீா் நெகி தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா்.
நிகழ்ச்சியில் வி.கே.சிங் பேசுகையில், ‘முதல் பெண் அதிகாரிகள் பிரிவு பயிற்சியை நிறைவு செய்யும் இன்றைய தினம் அகாதெமி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் அதிகாரம் அளித்தலுக்கான நமது முன்னெடுப்பில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லாகும்’ என்றாா்.