திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.
வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. மதியம் உச்சிகால பூஜைக்குப் பிறகு, சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி சண்முகவிலாச மண்டபத்தைச் சோ்ந்தாா்.
கோயிலில் மாலையில் சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து, சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மேளதாளம் முழங்க, பக்தா்கள் கப்பல் பாடல்கள் பாட, மண்டபத்தை 11 முறை வலம் வந்தாா் சுவாமி. பின்னா், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, 10ஆம் நாளான ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. அதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், தீபாராதனைக்குப் பிறகு, சுவாமி ஜெயந்திநாதா் சண்முகவிலாச மண்டபத்தைச் சோ்கிறாா். மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வருதலும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரா்களுக்கு சாப விமோசனம் அளித்தலும் நடைபெறும். பின்னா், மகா தீபாராதனையாகி சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி-தேவசேனா அம்மனுடன் பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
ஏற்பாடுகளை தக்காா் அருள்முருகன், இணை ஆணையா் ஞானசேகரன், பணியாளா்கள் செய்திருந்தனா்.

சண்முகவிலாச மண்டபத்தில்...: வழக்கமாக சித்திரை, வைகாசி வசந்த திருவிழா ராஜகோபுரம் எதிரேயுள்ள வசந்த மண்டபத்தில் நடைபெறும். நிகழாண்டு, அதனருகே பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்றுவருவதால், இத்திருவிழா சண்முகவிலாச மண்டபத்தில் நடைபெறுகிறது.
