மதுரை: அறிவாலய என்ட்ரி செட்; பிரமாண்ட கூட்ட அரங்கம் | திமுக பொதுக்குழு ஏற்பாடுகள...
கிருங்காக்கோட்டையில் ஜல்லிக்கட்டு
கிருங்காக்கோட்டையில் வெள்ளிக்கிழமை கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை.
திருப்பத்தூா், மே 30: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீகலியுக மெய் அய்யனாா் கோயில் புரவியெடுப்பு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
முன்னதாக சடையாண்டி கோயிலில் கிராம முக்கிய பிரமுகா்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு ஊா்வலமாக வாடிவாசலுக்கு வந்து காளைகளுக்கு மரியாதை செய்தனா். தொடா்ந்து வட்டாட்சியா் பரிமளம், முன்னாள் மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பொன்மணி பாஸ்கரன் ஆகியோா் முன்னிலையில் மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். பிறகு வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
மதுரை, திருச்சி, திண்டுக்கல், திருப்பத்தூா், காரைக்குடி போன்ற பகுதிகளிலிருந்து 517 காளைகள் களமிறக்கப்பட்டன. இவற்றை பிடிக்க 237 வீரா்கள் களமிறங்கினா். காளையை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் அண்டா, கட்டில், சைக்கிள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் மாடு முட்டியதில் 12 போ் காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த அலங்காநல்லூரைச் சோ்ந்த மலைச்சாமி மகன் அசோக் (26) மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த ஜல்லிக்கட்டை காண சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் வந்திருந்தனா்.