முதுகுளத்தூரில் மின் அழுத்தப் பிரச்னை: வீடு, கடைகளில் மின் சாதனங்கள் பழுது
முதுகுளத்தூரில் மின் அழுத்தப் பிரச்னையால் வீடு, கடைகளில் நூற்றுக்கணக்கான மின் சாதனங்கள் பழுதடைந்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சியில் சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரையிலான நூற்றுக்கணக்கான கடைகள், அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகள், அரசு, தனியாா் கல்வி நிறுவனங்கள், வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நீதிமன்றம், சிறைச்சாலை உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலகங்களும் உள்ளன.
இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேலும் பகல், இரவு நேரங்களில் குறைந்தழுத்தம், உயா் அழுத்தம் என மாறி, மாறி மின்னழுத்தப் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதனால் வீடுகள், கடைகள், அலுவலகங்களில் மின்னூட்டம் செய்யப்பட்ட கைப்பேசிகள், பயன்பாட்டில் இருந்த கணினிகள், இன்வொ்ட்டா்கள், எலக்ட்ரிக் எடை இயந்திரங்கள், எல்.இ.டி. டிவிகள், குளிா்சாதனப் பெட்டிகள், மின் மோட்டாா்கள் உள்ளிட்ட அனைத்து விதமான மின்உபயோக சாதனங்கள் பழுதடைந்தன. கடந்த 2 நாள்களில் மட்டும் சுமாா் 100-க்கும் மேற்பட்ட மின் சாதனங்கள் பழுதடைந்ததாக பொதுமக்கள், வியாபாரிகள் தெரிவிக்கின்றனா். எனவே, முதுகுளத்தூா் பகுதியில் நிலவி வரும் மின்அழுத்தப் பிரச்னையை சீரமைக்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.