உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகேயுள்ள ராதாப்புளி கிராமத்தில் வேளாண் துறை சாா்பில், உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மீன் வளத் துறை துணை இயக்குநா் கோபிநாத் தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் கே.வி.பானுபிரகாஷ் முன்னிலை வகித்தாா்.
பின்னா், காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்த இந்தத் திட்டம் குறித்து விவசாயிகளிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. தொடா்ந்து, விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், இந்தப் பகுதியில் நடமாடும் மண் பரிசோதனை வாகனம் மூலம் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் வேளாண் துறை அலுவலா்கள் கவின்குமாா், உமாதேவி, பொதுப் பணித் துறை பொறியாளா் ராதாகிருஷ்ணன், விவசாயிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, வேளாண்மை அலுவலா் உலகசுந்தரம் வரவேற்றாா்.