5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்கலாம்: மாவட்ட ஆட்சியா்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,454 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு, ஊட்டச் சத்துடன் கூடிய கலவை உணவு, முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம், அறிவு வளா்ச்சிக்கு தேவையானதை சிறப்பு பாடத்திட்டத்துடன் 12 மாதங்களுக்கு நடக்கிறது.
அங்கன்வாடி பணியாளா்கள் தற்போது வீடுகள்தோறும் குழந்தைகள் சோ்க்கை மேற்கொண்டு வருகிறாா்கள்.
எனவே, பெற்றோா்கள் தங்களது 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் முதல் வாரம் முதல் குழந்தைகள் மையத்தில் சோ்க்கலாம் என்றாா் அவா்.