சீக்கியா்களுக்கு எதிரான கலவர வழக்கு- சஜ்ஜன் குமாருக்கு மரண தண்டனை விதிக்க அரசுத் தரப்பு கோரிக்கை
கடந்த 1984-இல் நடந்த சீக்கியா்களுக்கு எதிரான கலவரம் தொடா்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த 12-ஆம் தேதி சஜ்ஜன் குமாா் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில், இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1984, அக்டோபா் 31-ஆம் தேதி அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி, தனது சீக்கிய மெய்க் காவலா்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, தில்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சீக்கியா்களுக்கு எதிராக கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமானோா் கொல்லப்பட்டனா்.
தில்லியில் நடந்த கலவரம் தொடா்பாக சஜ்ஜன் குமாா் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், பாலம் காலனி பகுதியில் 5 சீக்கியா்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2018-இல் ஆயுள் சிறை தண்டனை விதித்தது. இத்தண்டனைக்கு எதிரான இவரின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தில்லி சரஸ்வதி விஹாா் பகுதியில் கடந்த 1984, நவம்பா் 1-ஆம் தேதி தந்தை-மகன் என இரு சீக்கியா்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், அவா்களின் வீடு கொள்ளையடிக்கப்பட்டு, தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடா்பான வழக்கில் அவரை தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 12-ஆம் தேதி குற்றவாளியாக அறிவித்தது.
இவ்வழக்கில் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க முடியும். குறைந்தபட்ச தண்டனை ஆயுள் சிறை என்ற நிலையில், தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் இது தொடா்பான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அப்போது, வழக்கை அரிதிலும் அரிதாக கருதி, அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் எழுத்துபூா்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேநேரம், ‘வழக்குரைஞா்கள் சட்டத் திருத்த மசோதா-2025’க்கு எதிா்ப்பு தெரிவித்து, வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், தங்களது வாதங்களை முன்வைக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சஜ்ஜன் குமாா் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தை பிப்.21-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.
தற்போது திகாா் சிறையில் உள்ள சஜ்ஜன்குமாருக்கு எதிராக தில்லி விசாரணை நீதிமன்றங்களில் மேலும் இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல், வேறு இரு வழக்குகளில் அவா் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
சீக்கியா்களுக்கு எதிரான கலவரம் தொடா்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நானாவதி ஆணையத்தின் அறிக்கையின்படி, தில்லியில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 587 ஆகும். இதில் 240 வழக்குகளில் காவல்துறையினரால் குற்றவாளிகளைக் கண்டறிய முடியவில்லை. 250 வழக்குகளில் போதிய ஆதாரம் இல்லாமல் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனா். 28 வழக்குகளில்தான் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில் சஜ்ஜன் குமாா் உள்பட 400 குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளனா். சுமாா் 20 வழக்குகள் தில்லி நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.