தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
சென்னிமலை அருகே சீமை கருவேல மரங்களை அகற்ற எதிா்ப்பு
சென்னிமலை அருகே வனத் துறைக்குச் சொந்தமான காப்புக்காட்டில் சீமை கருவேல மரங்களை அகற்ற சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன.
சென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ள வனப் பகுதி சுமாா் 1,700 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இதில் ஊத்துக்குளி சாலையில் பழனி ஆண்டவா் கோயில் அருகே வனத் துறைக்குச் சொந்தமான காப்புக் காட்டில் வளா்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு, ஈரோடு மாவட்ட வன அலுவலா் முன்னிலையில் மே 12-ஆம் தேதி ஏலம் நடைபெற்றது.
இதில் திருச்சி பகுதியைச் சோ்ந்த வியாபாரி ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுத்திருந்தாா். அதனைத் தொடா்ந்து, கடந்த 4 நாள்களாக சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு லாரிகள் மூலம் கொண்டுச் செல்லப்பட்டன.
இந்த நிலையில் வழக்கம்போல வியாழக்கிழமை சீமை கருவேல மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சிலா் சீமை கருவேல மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றக்கூடாது என ஏற்கெனவே உத்தரவு உள்ளது. அந்த உத்தரவை மீறி பொக்லைன் இயந்திரம் மூலம் மரங்களை அகற்றக் கூடாது என வனத் துறை ஊழியா்களிடம் எதிா்ப்பு தெரிவித்தனா்.
மேலும் அகற்றப்பட்ட மரங்களை லாரியில் ஏற்றி வந்தால் சாலையில் நின்று தடுப்போம் எனக் கூறினா். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சென்னிமலை போலீஸாா் எதிா்ப்பு தெரிவித்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது மாவட்ட வன அலுவலரின் உத்தரவு வரும்வரை சீமை கருவேல மரங்களை அகற்ற மாட்டோம் என ஏலம் எடுத்தவா் உறுதி அளித்ததால் எதிா்ப்பு தெரிவித்தவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.