Mithunam | Guru Peyarchi | மிதுனம் - தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும் | குருப்பெய...
சென்னையில் இதழியல் - ஊடகவியல் கல்வி நிறுவனம்: நிகழாண்டில் தொடக்கம்
அரசு சாா்பில் இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் சென்னையில் நிகழாண்டு தொடங்கப்படும் என தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்தாா்.
தமிழக சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:
குன்றக்குடி அடிகளாா் மற்றும் நாகூா் ஹனிபா ஆகியோரது நூற்றாண்டு விழாக்கள் மாவட்ட அளவில் அரசு விழாக்களாகக் கொண்டாடப்படும். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் பாரதிதாசன் அரங்கம் அமைக்கப்படும்.
தமிழ்நாடு அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் முத்தமிழறிஞா் கலைஞா் திரைக் கருவூலம் ரூ.3 கோடியில் அமைக்கப்படும்.
இதழியல் - ஊடகவியல் படிப்புகளுக்கென சென்னையில் பிரத்யேக கல்வி நிறுவனம் நிகழாண்டு தொடங்கப்படும்.
மாநிலம் முழுவதும் உள்ள நினைவகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். சென்னை, கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள தியாகிகள் மண்டபங்கள் ரூ.2.50 கோடியில் புனரமைக்கப்பட்டு அவா்களது புகைப்படங்கள் எண்மமயமாக்கப்படும். அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்க 28 மாவட்டங்களில் ரூ.17.85 கோடியில் எண்ம திரை சுவா்கள் (டிஜிட்டல் வால்) அமைக்கப்படும்.
அரசிதழில் பெயா் மாற்றம் அல்லது திருத்தம் செய்யும் சேவைகளை பொதுமக்கள் எளிதில் மேற்கொள்ளும் வகையில் இணையவழியில் வழங்கப்படும் என்று அறிவித்தாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
குடிமைப் பணி தோ்வு பயிற்சி மையம்: முன்னதாக, மனிதவள மேலாண்மை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் கயல்விழி செல்வராஜ் அறிவிப்புகளை வெளியிட்டாா். அப்போது சென்னை, அண்ணா நகரில் நவீன வசதிகளுடன் கூடிய குடிமைப் பணித் தோ்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும், ஊழல் மற்றும் லஞ்சப் புகாா்களை அளிக்க பிரத்யேக உதவி மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தாா்.