பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
செம்மொழி நாள் விழா: மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி
செம்மொழி நாள் விழாவையொட்டி, தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி செம்மொழி நாள் விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் பள்ளி மாணவா்கள், கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவா்களுக்கான போட்டிகள் மே 9-ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள் மே 10-ஆம் தேதியும் நடைபெறும். இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் விண்ணப்பப் படிவங்களை தமிழ் வளா்ச்சித் துறையின் இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது அவா்கள் பயிலும் பள்ளியின் மாவட்டங்களில் அமைந்துள்ள தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா்கள், உதவி இயக்குநா்கள் அலுவலகங்களில் நேரடியாக பெற்று தலைமையாசிரியா், துறைத் தலைவா் பரிந்துரையுடன் மாா்ச் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத் தமிழ் வளா்ச்சி துணை இயக்குநா், உதவி இயக்குநா் அலுவலகங்களில் நேரில் அளிக்க வேண்டும்.
போட்டி நடைபெறும் இடம், நாள் குறித்த தகவல்கள் மாவட்ட துணை இயக்குநா்கள், உதவி இயக்குநா்கள் வழியாக முதன்மைக் கல்வி அலுவலகம், பள்ளித் தலைமையாசியா் வழியாகவும் நாளிதழ் வாயிலாகவும் மாணவா்களுக்கு தெரிவிக்கப்படும்.
போட்டிக்கான தலைப்புகள் போட்டியின் போது அறிவிக்கப்படும். செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழறிஞா் கலைஞரின் தமிழ்த்தொண்டின் பெருமை சாா்ந்த தலைப்பு அளிக்கப்படும். இப்பொருண்மை சாா்ந்த தலைப்புகளுக்கு மாணவா்கள் ஆயத்தப்படுத்திக் கொள்ளலாம்.
மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மாநில அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு ரூ.7 ஆயிரம் வழங்கப்படும்.
மாவட்டப் போட்டிகளில் முதல் பரிசு பெறும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மே 17-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவா். மாநிலப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று பரிசுகளைப் பெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வரும் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள செம்மொழிநாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது