தமிழகத்தில் நாளைமுதல் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வியாழக்கிழமை (பிப்.27) முதல் மாா்ச் 1- ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக புதன்கிழமை (பிப்.26) தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் வட வானிலை நிலவும்.
கனமழை எச்சரிக்கை: பிப்.27-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், பிப்.28- இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடா்ந்து, மாா்ச் 1- இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 89 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: பிப். 26 முதல் பிப். 28-ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.