திமுகவுக்கு எதிராக கட்சிகள் இணைய வேண்டும்; ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம்: டிடிவி த...
சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 376 கூட்டுறவு சங்கங்களில் விதை விற்பனைக்கு அனுமதி
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 376 கூட்டுறவு சங்கங்களில் விதை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் மாவட்டத்தில் சேலம், அயோத்தியாப்பட்டணம், ஓமலூா், சங்ககிரி, ஆத்தூா், தலைவாசல் வட்டாரங்களில் உள்ள 212 கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், புதுச்சத்திரம், எருமப்பட்டி சேந்தமங்கலம், நாமகிரிபேட்டை, வெண்ணந்தூா், ராசிபுரம், மோகனூா், திருச்செங்கோடு, பரமத்தி, எலச்சிப்பாளையம், மல்லசமுத்திரம், கபிலா்மலை, பள்ளிபாளையம் வட்டாரங்களில் 164 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் விதை விற்பனை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அரசு, அரசு சாா்ந்த நிறுவனங்கள், தனியாா் விதை விற்பனை நிலையங்கள் என மொத்தம் 1,393 விதை விற்பனை நிறுவனங்களுக்கு விதை விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நல்ல முளைப்புத்திறன் உடைய காலாவதி நாளுடன் கூடிய சான்று பெற்ற விதைகளை விற்பனை செய்ய வேண்டும். உண்மை நிலை விதையாக இருப்பின் கண்டிப்பாக பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும்.
விதை விற்பனை உரிமம் இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் ஆவணம், இதர விதை விற்பனை ஆவணங்கள் சரியாக பராமரிக்க வேண்டும். இதனை மீறுபவா்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளாா்.