ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம்: மேலும் 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்
ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கான தடுப்பூசி திட்டம் சென்னை உள்பட தமிழகத்தில் மேலும் 7 மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சேலத்தில் 4-ஆவது பொது சுகாதாரத் துறை மாநாட்டை செப்டம்பா் மாதத்தில் நடத்துவதற்கான இலச்சினை, வலைதளம் மற்றும் கருப்பொருள் பாடல் ஆகியவற்றை சென்னையில் அமைச்சா் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
தொடா்ந்து, ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் மருத்துவ அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கான திறன் மேம்பாட்டு கையேட்டை வெளியிட்டு அதற்கான சிறப்பு தொலைபேசி எண்ணையும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் கடந்த நிதிநிலை அறிக்கையில் 110 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த நோய்கள் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் மருத்துவ அலுவலா்கள் மற்றும் சுகாதார நலப் பணியாளா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டில் 46,925 பேருக்கு டெங்கு, 678 பேருக்கு சிக்குன்குனியா, 327 பேருக்கு மலேரியா, 7,466 பேருக்கு உண்ணிக் காய்ச்சல், 3,918 பேருக்கு எலிக்காய்ச்சல், 84 பேருக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.
தடுப்பூசி திட்டம்: கொசுக்கள் கடிப்பதால் ஏற்படும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசி திட்டம் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகா், திருச்சி, திருவாரூா், மதுரை, பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், திருவண்ணாமலை, கரூா், புதுக்கோட்டை மற்றும் திருவள்ளூா் ஆகிய 14 மாவட்டங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம் 58,22,906 போ் பயனடைந்துள்ளனா். தற்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, வேலூா், நாகப்பட்டினம் மற்றும் சென்னை ஆகிய 7 மாவட்டங்களுக்கு அந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
அதன்படி, தடுப்பூசி முகாம்கள் அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடத்தப்படும். இதன்மூலம் 32,64,099 குழந்தைகள் பயன்பெறுவா் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், கூடுதல் இயக்குநா் சம்பத், இணை இயக்குநா் சந்தோஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.