ஜென்சோல் இன்ஜினியரிங் பங்குகள் 5% சரிவு!
புதுதில்லி: ஜென்சோல் இன்ஜினியரிங் பங்குகள், 5 சதவிகிதம் சரிந்து, அதன் லோயர் சர்க்யூட் லிமிட்டை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்கின் விலை 4.98 சதவிகிதம் சரிந்து ரூ.111.65 ஆக இருந்தது. இது அதன் 52 வார குறைந்த நிலையாக பதிவானது.
என்.எஸ்.இ-யில், இது 5 சதவிகிதம் சரிந்து ரூ.110.71 ஆக இருந்தது. இது அதன் லோயர் சர்க்யூட் மற்றும் 52 வார குறைந்த விலையாக பதிவானது. இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது அதன் 52 வார உச்ச விலையான ரூ.1,125.75 இருந்து, தற்போது 90 சதவிகிதம் சரிந்துள்ளது.
செபி கடந்த வாரம் தனது இடைக்கால உத்தரவின் மூலம், நிறுவன சகோதரர்களான அன்மோல் சிங் ஜக்கி மற்றும் புனீத் சிங் ஜக்கி ஆகியோரை அடுத்த அறிவிப்பு வரும் வரை பங்குச் சந்தைகளை அணுக தடை விதித்தது.
பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனத்திடமிருந்து நிதியை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கையாண்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பெருநிறுவன நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடு குறித்த கவலைகளை எழுப்பிய நிலையில் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.
பங்கு விலையை கையாளுதல் மற்றும் ஜென்சோலில் இருந்து நிதியை திசைதிருப்புவது தொடர்பாக ஜூன் 2024ல் புகார் வந்ததையடுத்து, இந்த புகாரை ஆராயத் தொடங்கியது செபி.
இதனையடுத்து ஜென்சோல் இன்ஜினியரிங் அதன் திட்டமிட்டபடி பங்குப் பங்கீடு (stock split) 1:10 என்ற விகிதத்தில் பிரிப்பதை நிறுத்தி வைக்குமாறு செபி உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: பேங்க் ஆஃப் பரோடாவில் தனது மூலதனத்தை 2% அதிகரித்த எல்ஐசி!