செய்திகள் :

`ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை... இதுதான் ஸ்டாலினின் கை!' - கேள்விகளை எழுப்பி சாடும் இபிஎஸ்

post image

டெல்லியில் மே 24-ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு நியாயமான நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டோடு கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின், மே 24-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்திருக்கிறார்.

ஸ்டாலினின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்.

அன்று 2G-க்காக அப்பா டெல்லி சென்றார்... இன்று... டாஸ்மாக்... தியாகி... தம்பி... வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ?" என்று விமர்சித்திருந்தார்.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

இதற்கு எதிர்வினையாற்றிய ஸ்டாலின், "சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?

`பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது' என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?" என்று விமர்சித்தார்.

இந்த நிலையில், ஸ்டாலினின் இத்தகைய விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "முந்தைய மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டங்களில் "தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன?

தமிழ்நாடா? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே? ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்?

ஸ்டாலின் அவர்களே அது கண்ணாடி! உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?

அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு வந்த போது, கீழ்மாடியில் நீங்களும், உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரைவார்த்தபோது டேபிளுக்கு கீழ் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா?

எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக வெள்ளைக் குடை காட்டினீர்களே அப்போது தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா?

எது ஸ்டாலினின் கை?

அண்ணா பல்கலை. வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிவரங்களோடு FIR லீக் செய்த கை ஸ்டாலினின் கை.

ஜாபர் சாதிக் போன்ற International Drug Mafia தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை!

ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் "SIR"களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை.

மோடி - ஸ்டாலின்
மோடி - ஸ்டாலின்

அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உங்கள் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர் நீதிமன்றம் தாமாக வந்து CBI விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்ற கை, உங்கள் கை.

தேர்தல் கூட்டணிக்காக, மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கைதான் உங்கள் கை!

7.5% உள் இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலிலும், அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டியவன் நான்!

அப்போது நீங்கள் ராஜ் பவன் வாசலில் அரசியலோ, அவியலோ செய்துகொண்டு இருந்தீர்களே.. நினைவிருக்கிறதா?

அதனால், மாநில உரிமைகளைப் பற்றி மாண்புமிகு அம்மா அவர்கள் வழி வந்த என்னிடம் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்!

இதற்கெல்லாம் பின்னர் வருவோம்... நான் கேட்ட கேள்வி என்ன? #யார்_அந்த_தம்பி? உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்?

உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் (தம்பி) என்று சொல்கிறார்களே, ED ரெய்டு என்றதும் ஏன் அந்த தம்பி, நாட்டை விட்டே தப்பிச் சென்றார்?

டாஸ்மாக்கில் "தம்பி" அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள்! உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார்!

ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! மீண்டும் கேட்கிறேன் #யார்_அந்த_தம்பி?" என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

'விமர்சனங்களைத் தாண்டித்தான் தி.மு.க 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது!" - சொல்கிறார் கே.என்.நேரு

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மாலையீடு அருகே உள்ள திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாத... மேலும் பார்க்க

அனகாபுத்தூர் குடியிருப்புகள் புல்டோசர் கொண்டு அகற்றம்; வலுக்கும் எதிர்ப்புகள்; அரசின் விளக்கம் என்ன?

அனகாபுத்தூர் பகுதியில் அடையாறு ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் என அங்கு வசித்துவரும் மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு தமிழக அரசு இடித்து வருகிறது.அரசின் இத்தகைய செயலுக்கு மே 17 இயக்கம் உள... மேலும் பார்க்க

Kannada - Hindi சர்ச்சை: `முதலில் வங்கி ஊழியர்களுக்கு இந்த பயிற்சியைக் கொடுங்கள்'- கர்நாடக முதல்வர்

கர்நாடகாவில் எஸ்.பி.ஐ வங்கியில், உள்ளூர் வாடிக்கையாளரிடம் வங்கியின் மேலாளர் கன்னடத்தில் பேச மறுத்து, "இது இந்தியா இந்தியில்தான் தான் பேசுவேன். ஒருபோதும் கன்னடத்தில் பேசமாட்டேன்" என்று கூறும் வீடியோ இர... மேலும் பார்க்க

Pakistan: `ஃபீல்ட் மார்ஷல்' - ராணுவ தளபதி அசிம் முனீருக்கு பதவி உயர்வு! - பின்னணி என்ன?

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி 'ஆபரேஷன் சிந்தூர்'. மே 7-ம் தேதி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களை தகர்த... மேலும் பார்க்க

`ஒரே ரெய்டில் புலிகேசியாக மாறியவர், என்னை பார்த்து..' - பழனிசாமியின் விமர்சனத்துக்கு ஸ்டாலின் பதில்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு டெல்லி செல்வது, தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது.இது குறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க