டெலிவரி ஏஜெண்ட் போல நுழைந்து பாலியல் வன்கொடுமை! செல்ஃபி எடுத்து மிரட்டல்!
புணேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனில் செல்ஃபி எடுத்து, இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள கோந்த்வா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 22 வயது பெண் தனது சகோதரருடன் வசித்து வந்தார்.
புதன்கிழமை மாலை அவரது சகோதரர் வெளியூர் சென்றிருந்த நிலையில், அந்த பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு 7.30 மணியளவில் அப்பெண்ணின் வீட்டுக்கு வங்கியில் இருந்து கூரியர் வந்துள்ளதாகவும் அதனை டெலிவரி செய்ய வந்திருப்பதாகவும் ஒரு நபர் கூறியுள்ளார்.
இதையடுத்து, கையெழுத்திட பேனா எடுப்பதற்காக அப்பெண் வீட்டுக்குள் சென்ற நிலையில், வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கதவை உள்புறமாக தாலிட்டுள்ளார்.
அந்த பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து அடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், அப்பெண்ணின் செல்போனில் செல்ஃபி எடுத்த அந்த நபர், இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவேன் என்று அதில் குறிப்பிட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இரவு 8.30 மணியளவில் மயக்கம் தெளிந்தவுடன் அப்பெண் தனது உறவினருக்கு தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுடன் பேசிய காவல் ஆணையர் ராஜ்குமார் ஷிண்டே, ”மயக்க மருந்து போன்ற திரவம் பெண்ணின் முகத்தில் அடிக்கப்பட்டதால், அந்த பெண்ணுக்கு நடந்தது பற்றிய சுயநினைவு இல்லை. எந்த மாதிரியான திரவம் அடிக்கப்பட்டது என்பது பற்றி தடயவியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியின் முகம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 10 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது, குற்றவாளி விரைவில் பிடிபடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
A man entered a house in an apartment complex in Pune and sexually assaulted a young woman.