ENG vs IND: `கோலியுடன் விளையாடாதது வருத்தமே..' - இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்...
``தந்தை இல்லாத எனக்கு தந்தையாக உதவிய முதல்வர்'' - IITக்கு தேர்வான பழங்குடியின மாணவி நெகிழ்ச்சி
தமிழ்நாடு முதலமைச்சர், மாணவ மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கிடும் வகையில் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
குறிப்பாக, பெண்கல்வி முன்னேற்றத்திற்காக புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கி வருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான இத்திட்டங்களின் பலனாக அனைத்துதரப்பு மாணவ, மாணவியர்களுக்கும் சிறப்பான கல்வி வழங்கப்பட்டு வருவதுடன், தேசிய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு 49 சதவீதம் என்ற அளவில் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது.
சேலம் மாவட்டம், கல்ராயன்மலையை சேர்ந்த கருமந்துறை, அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பயின்ற ஆ.ராஜேஸ்வரி என்ற பழங்குடியின மாணவி அண்மையில் நடைபெற்ற ஜே.இ.இ. தேர்வில் அகில இந்திய அளவில் 417 -வது இடத்தில் தேர்ச்சி பெற்று சென்னை ஐ.ஐ.டி.யில் உயர்கல்வி பயில தகுதி பெற்றுள்ளது பாராட்டுக்குரிய சாதனையாகும்.
மலைவாழ் இன ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ஆ.ராஜேஸ்வரியின் தந்தை கடந்த 2023-ல் உடல்நல குறைபாடு காரணமாக இறந்துவிட்டார். தாயார் ஆ.கவிதா, அக்கா ஜெகதீஸ்வரி, அண்ணன் ஸ்ரீ கணேஷ் ஆகியோருடன் கருமந்துறை மலைப்பகுதியில் வசித்து வருகிறார்.
சிறுவயதிலிருந்தே படிப்பில் சிறந்து விளங்கிய மாணவி ஆ.ராஜேஸ்வரி 10ஆம் வகுப்பில் 438 மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பில் 600க்கு 521 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.
ஆ.ராஜேஸ்வரி தனது பள்ளி தலைமை ஆசிரியர் வழிகாட்டுதலின்படி பழங்குடியின நலத்துறையின் சிறப்பு வகுப்புகளிலும், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் செயல்பட்டு வரும் அரசு பயிற்சி மையத்திலும் சேர்ந்து உயர்கல்வி நுழைவுத்தேர்விற்கு தயாராகி வந்தார்.
இந்நிலையில் JEE Mains & JEE Advance தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 417 – வது இடத்தில் தேர்ச்சி பெற்று சென்னை ஐ.ஐ.டி.யில் பயில தகுதி பெற்றுள்ளார்.

மேலும் JEE Advanced தொடர்பான கவுன்சிலிங்கிற்காக தற்போது குமிழி ஏகலைவா உண்டி உறைவிட மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பழங்குடியினர் நலத்துறை மூலம் வாசுகி பவுண்டேசன் மூலம் நடத்தப்படும் உயர்கல்விக்கான பயிற்சி பெற்று வருகிறார். இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் Aerospace Engineering பாடப்பிரிவில் உயர்கல்வி பயில விருப்பம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவி ஆ.ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டி.யில் உயர்கல்வி பயில தகுதிப் பெற்றுள்ளதை அறிந்தவுடன், மாணவி ஆ.ராஜேஸ்வரிக்கு எனது Salute என பாராட்டி வாழ்த்து தெரிவித்து, அவரது உயர்கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என அறிவித்தார்.
இதைனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.6.2025 அன்று சேலம் மாவட்ட சுற்றுப் பயணத்தின்போது, பழங்குடியின மாணவி ஆ.ராஜேஷ்வரியை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்து, பழங்குடியினர் நலத்துறையின் தொல்குடித் திட்டத்தின் கீழ் ரூ.5.73 இலட்சம் மதிப்பிலான வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினையும், உயர்கல்வி பயில்வதற்கு உதவிடும் வகையில் ரூ.70,000 மதிப்பிலான மடிக்கணினியையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
பழங்குடியின மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் அரசின் சாதனைக்கு முத்தாய்ப்பாக மாணவி ராஜேஷ்வரியின் சாதனை அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

நன்றி தெரிவித்த மாணவி
பழங்குடியின மாணவி ஆ.ராஜேஸ்வரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கூறுகையில், "முதலமைச்சர் அவர்கள் நான் IIT- ல் பயில தகுதி பெற்றுள்ளயொட்டி எனக்கு வாழ்த்து தெரிவித்து மேற்படிப்பிற்கான செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்தார்கள். அது மட்டுமல்லாமல், 12.6.2025 அன்று சேலத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் என்னை நேரில் அழைத்து பாராட்டி, எனது உயர்கல்விக்கு உதவிடும் வகையில் மடிக்கணினியினை வழங்கியுள்ளார்கள்.

மேலும் வீடு கட்டிக்கொடுப்பதற்கான ஆணையும் வழங்கியுள்ளார்கள். நன்றாக பயின்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
முதலமைச்சர், தந்தை இல்லாத எனக்கு தந்தையாக எனது உயர் கல்விச் செலவை ஏற்பதும், வீடு வழங்கியுள்ளதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.