தன்பாலின ஈர்ப்பாளராக அறியப்பட்ட மதகுரு சுட்டுக்கொலை!
தென் ஆப்பிரிக்கவில் உலகின் முதல் தன்பாலின ஈர்ப்புக்கொண்ட இஸ்லாமிய மதகுருவாக (இமாம்) அறியப்பட்டவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கிழக்கு கேப் மாகாணத்தில் உலகின் முதல் தன்பாலின ஈர்ப்புக்கொண்ட இஸ்லாமிய மதகுருவாக அறியப்பட்ட முஹ்சின் ஹெண்டிரிக்ஸ், நேற்று (பிப்.15) கெபெர்ஹா நகரத்தில் மற்றொரு நபருடன் காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அவர்களது காரை மற்றொரு வாகனத்தைக் கொண்டு வழிமறித்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அவர்களை நோக்கி பலமுறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதில், பின்னிருக்கையில் அமர்ந்திருந்த முஹ்சினின் உடலில் குண்டுகள் பாய்ந்து அவர் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் அந்த காரின் ஓட்டுநர் அதிர்ஷடவசமாக உயிர்தப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டிருப்பது உறுதியான நிலையில் அதற்கான காரணம் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் ஆதாரங்களைத் திரட்டி விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் இரு வெவ்வேறு சாலை விபத்துகள்: 16 பேர் பலி, 45 பேர் காயம்
இந்நிலையில், முஹ்சினின் கொலைக்கு சர்வதேச தன்பாலின ஈர்ப்பாளர்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், அவரது மரணம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும், இந்த கொலையானது பாலின பாகுபாட்டினால் நிகழ்த்தப்பட்டதா என அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என அந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
முன்னதாக, கடந்த 1996 ஆம் ஆண்டு தன்னை தன்பாலின ஈர்ப்பாளராக அறிவித்துக்கொண்ட முஹ்சின் ஹெண்டிரிக்ஸ், பிற தன்பாலின ஈர்பாளர்களின் பாதுகாப்பிற்காகவும் விளிம்புநிலை பெண்கள் இஸ்லாம் பயிலவும் அந்நாட்டின் வயின்பெர்க் நகரத்தில் அல்-குர்பா எனும் மசூதியை நிர்வாகித்து வந்துள்ளார்.
மேலும், 2022 ஆம் ஆண்டு வெளியான "தி ரேடிகல்" என்ற ஆவணப்படத்தில் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ், தனக்கு எதிரான அச்சுறுத்தல்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஒருவர் தனது உண்மையான அடையாளத்துடன் இருக்க வேண்டிய அவசியம் மரணத்தின் பயத்தை விட பெரியது என்று அவர் அதில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.